அவுனியாடி சாத்ரா எனப்படும் இது மாஜூலி தீவில் அமைந்துள்ள மற்றொரு முக்கியமான சாத்ராவாகும். இது 1653ம் ஆண்டில் நிரஞ்சன் பதக்தேவா என்பவரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பால்நாம் திருவிழா மற்றும் அப்சரா நடனத்திற்காக இந்த சாத்ரா புகழ் பெற்றுள்ளது.
பால்நாம் எனும் திருவிழா இந்த மாஜூலி தீவுப்பகுதியின் முக்கியமான ஆன்மீக திருவிழாவாகும். இது நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. சாத்ரா வளாகத்தின் மையப்பகுதியில் நடத்தப்படும் பிரார்த்தனையில் கலந்து கொள்ள காலை முதல் மாலை வரை ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த சடங்கு நடைமுறை கடந்த 350 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இங்குள்ள நாம் கவுர் எனும் மையக்கூடத்தில் கோவிந்த பஹவானுக்காக சாத்ரிய நடனம் நிகழ்த்தப்படுகிறது.
பால்நாம் திருவிழா மட்டுமல்லாமல் ராஸலீலா, ஜன்மாஷ்டமி, ஹோலி, போஹாக் பிஹு (அஸ்ஸாமிய புதுவருடப்பிறப்பு) போன்ற திருவிழாக்களும் இந்த சாத்ராவில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.
அவுனியாடி சாத்ரா மடலாயம் ஒரு பிரத்யேக அரும்பொருள் காட்சிக்கூடத்தையும் கொண்டிருக்கிறது. இந்த காட்சிக்கூடத்தில் பழமையான பாரம்பரிய அஸ்ஸாமிய வீட்டுப்பொருட்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு லக்கிம்பூர் பகுதியில் உள்ள தெமாஜு மற்றும் லுயித்-கபோலுகாட் ஆகிய இடங்களிலிருந்து இந்த அவுனியாடி சாத்ராவுக்கு பயணிகள் விஜயம் செய்யலாம்.