கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் யக்ஷி சிலை, அற்புத கலைப்படைப்பாக கலை ரசிகர்களால் போற்றப்படுகிறது. இந்த சிலை மலம்புழா கார்டனில், மலைத்தொடர்கள் மற்றும் அடர்ந்த பசுமையான தோட்டங்களின் பின்னணியில் எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த சிலையை காண்பதற்காகவே மலம்புழா கார்டனுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
கேரளாவின் புகழ்பெற்ற சிற்பிகளில் ஒருவரான கானை குஞ்சிராமன், 1969-ஆம் ஆண்டு புராணக் கதாபாத்திரமான யக்ஷிக்கு சிலை வடிவம் கொடுத்தார். இந்த மாபெரும் சிலை ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டிருக்கும் பாங்கும், சிற்பியின் கற்பனை திறனும் காண்போரை மயக்கம் கொள்ள செய்து விடும்.