கர்நாடகாவில் உள்ள செயிண்ட் மேரி தீவு தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தீவு உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும்.
இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இந்தியாவில் இருக்கக் கூடிய 26 புவியியல் நினைவுச் சின்னங்களில் செயிண்ட் மேரி தீவும் ஒன்று.
போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோட காமா கேரளாவின் காப்பாட் கடற்கரையில் கால்வைக்கும் முன் இந்த செயிண்ட் மேரி தீவில் நங்கூரமிட்டு நின்றிருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்தத் தீவு தற்போது கட்டிடங்கள் ஏதுமின்றி, விலங்குகளை கூட பார்க்க முடியாத பாலைவனம் போல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
செயிண்ட் மேரி தீவுக்கு அருகில் 58 கிலோமீட்டர் தொலைவில் மங்களூர் விமான நிலையம் உள்ளது. மேலும் பயணிகள் இந்தத் தீவை அடைய ஃபெர்ரி எனப்படும் சொகுசு மோட்டார் படகுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் இந்த ஃபெர்ரி படகுகள் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தே இயக்கபடும்.