கடல் மட்டத்திலிருந்து 1737 மீ உயரத்தில் உள்ள இந்த மணிகரன் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் குலு நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சீக்கியர் மற்றும் ஹிந்து இனத்தாரின் முக்கியமான புனித யாத்ரீக ஸ்தலமாக பிரசித்திபெற்று விளங்குகிறது. ஆபரணம் எனும் பொருளை தரும் வகையில் இந்த மணிகரன் எனும் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
புராணிகக்கதையின்படி, சிவனின் மனைவியான பார்வதி இப்பகுதியிலிருந்த குளத்தில் தனது ஆபரணத்தை தொலைத்துவிட்டு அதனை தேடித்தரும்படி தன் கணவரான சிவனிடம் அவர் வேண்டிக்கொண்டார்.
அதன்படியே சிவன் தனது பக்தர்களிடம் அந்த ஆபரணத்தை தேடுமாறு கூறினார். ஆனால் அவர்களால் ஆபரணத்தை கண்டுபிடிக்க முடியாததால் சிவன் சீற்றமடைந்து தனது மூன்றாவது கண்ணை திறந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ஏற்பட்ட எரிமலை போன்ற வெடிப்பில் பல ஆபரணக்கற்கள் பூமியிலிருந்து வெளிப்பட்டதாகவும் அந்த புராணிகக்கதை முடிகிறது.
மணிகரன் நகரில் ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா ஒரு பிரசித்தமான சுற்றுலா மற்றும் ஆன்மீக அம்சமாக திகழ்கிறது. இந்த ஸ்தலத்திற்கு சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குரு நானக் தேவ் தனது ஐந்து சீடர்களுடன் விஜயம் செய்ததாக மக்கள் நம்புகின்றனர்.
குருத்வாரா வளாகத்தில் உள்ள ஒரு வெந்நீர் ஊற்று பயணிகளை பெரிதும் கவர்வது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நகரில் உள்ள சிவன் கோயில் ஒன்றும் பக்தர்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது.
இப்பகுதியில்1905ம் ஆண்டில் 8.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட ஒரு பூகம்பத்திற்கு பிறகு இக்கோயில் சாய்ந்த நிலையில் காணப்படுவது மற்றொரு வித்தியாசமான அம்சமாக சொல்லப்படுகிறது. மணிகரன் ஸ்தலத்தில் ராமச்சந்திர பஹவான் கோயில் மற்றும் குலந்த் பீடம் போன்ற பல முக்கியமான ஹிந்து ஆன்மீக அம்சங்கள் நிறைந்திருப்பதால் யாத்ரீகர்களிடையே மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.
மேலும், ஹரிந்தர் மலை மற்றும் பார்வதி ஆறு, ஷோஜா, மலணா மற்றும் கிர்கங்கா போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்களும் இங்கு அமைந்துள்ளன. இப்பகுதிகளில் பயணிகள் டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.
மணிகரன் சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்ய விரும்பும் பயணிகள் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையலாம். ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையான கோடைப்பருவத்தில் மணிகரண் நகரத்திற்கு பயணம் மேற்கொள்வது உகந்தது.