கேரளாவின் அமைதியான கடற்கரைகளில் ஒன்றான மாராரிக்குளம் பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் பனைமரங்களும், மனித காலடிச் சுவடுகள் படாமல் பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளை மணற்பரப்பும் மாராரிக்குளம் கடற்கரையை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக திகழச் செய்துகொண்டிருக்கின்றன.
மாராரிக்குளம் கடற்கரையின் வெண்மணற்பரப்பில் கால்பதித்து நடப்பதும், தங்கம் போல தகதகக்கும் சூரியனின் இளஞ்சூட்டு ஸ்பரிசத்தை சுகித்துகொண்டும் உலா வருவதே பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும். அதோடு இந்தக் கடற்கரையை சுற்றி அமைந்திருக்கும் கோயில்களும், தேவாலயங்களும் மாராரிக்குளம் பீச்சின் அழகுக்கு அழகு சேர்க்க கூடியவை.
மாராரிக்குளம் பீச்சில் நீங்கள் வாலி பால் விளையாடுவது, பாராசைலிங் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவதோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கடலில் நீந்தித் திளைக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள வேண்டியே இந்தக் கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.