'பால் கடல்' எனும் பெயரை இந்த தூத்சாகர் அருவிக்கு யார் சூட்டினார்களோ தெரியவில்லை, ஆனால் இதன் பெயருக்கு ஏற்றார் போலவே இந்த அருவி மகாசமுத்திரம் போன்று ஒங்காரமிட்டவாறு சீறிக்கொண்டு மலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அழகு காணக்கிடைக்காத காட்சி. இந்த கவின் கொஞ்சும் அருவி பனாஜி நகரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக-கோவா எல்லையில் அமைந்திருக்கிறது.
புராணம் கூறும் செய்தி
தூத்சாகர் அருவிக்கு அருகே காணப்படும் அடர்ந்த வனத்தினுள்ளே அமைந்திருக்கும் ஏரி ஒன்றில் முன்னொரு காலத்தில் அழகான ராஜகுமாரி ஒருத்தி தினமும் நீராடி வந்தாள்.
அப்படி ஒரு நாள் அவள் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும்போது ராஜகுமாரன் ஒருவன் அவள் நீராடும் அழகை மறைந்திருந்து ரசித்து கொண்டிருந்தான். இந்தக் காட்சியை கண்ட ராஜகுமாரி பாலினை போன்ற ஏரி நீரினை ஒரு குவளையில் எடுத்து தன்னை மறைத்தவாறு தனக்கு முன்னே ஊற்றலானாள். அந்த நீரானதுதான் தற்போது மலையுச்சியிலிருந்து கொட்டிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
உலகின் மிக அழகிய அருவிகளில் ஒன்றாகவும், 310 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதால் இந்தியாவின் 5-வது உயரமான அருவியாகவும் கருதப்படும் தூத்சாகர் அருவி கோவா வனத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்த அருவியின் கம்பீரத்தையும், பேரழகையும் பரிபூரணமாக கண்டு ரசிக்க நீங்கள் மழைக் காலத்தில் வருவதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அருவியை நோக்கிச் செல்லும் சாலை மழைக் காலங்களில் மூடப்பட்டிருப்பதோடு, அக்டோபர் மாதத்திற்கு பின்புதான் திறந்துவிடப்படும்.
அதோடு அருவியின் கீழ்ப்பகுதியில் காணப்படும் குளம் சற்று ஆபத்தானதாக தோன்றினாலும் யார் வேண்டுமானலும் அதில் நீராடி மகிழலாம். மேலும் தூத்சாகர் அருவி பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயத்துக்குள், அடர் வனங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதால் இப்பகுதியில் பல்வேறு வகையான விலங்கினங்கள், தாவரயினங்கள், பறவைகள் ஆகியவற்றை நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.
தூத்சாகர் அருவியை ரயில் மூலமாக சுலபமாக அடையலாம். இந்த அருவியின் அருகாமை ரயில் நிலையமாக கால்லெம் ரயில் நிலையம் அறியப்படுகிறது. அதோடு கர்நாடக மாநிலத்திலிருந்து ஹூப்ளி, தர்வாத், அல்நாவர், லோண்டா, தீனைகாட், கேஸ்டில் ராக், தூத்சாகர் ரயில் பாதையில் தூத்சாகர் அருவியை அடைய முடியும்.
மேலும் தூத்சாகர் செல்லும் சாலை காட்டு வழியாக இருப்பதாலும், பல இடங்களில் சாலையை நதி கடந்து செல்வதாலும் கார் போன்ற வாகனங்களில் தூத்சாகர் அருவிக்கு பயணிப்பது ஆபத்தில் முடியலாம்.
தூத்சாகர் அருவியை தேடி எண்ணற்ற டிரெக்கிங் பிரியர்கள் வந்து செல்கின்றனர். எனவே இங்கு டிரெக்கிங் செல்பவர்கள் தங்கி ஓய்வெடுக்க சில தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.