மலே மகாதேஸ்வரா குன்று மைசூரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மகாதேஸ்வரா கோயிலும், அதை சூழ்ந்து காணப்படும் அடர்ந்த காடுகளும் உங்கள் உடலையும், உள்ளத்தையும் உற்சாகமூட்டி பயணத்தை இன்பமயமாக மாற்றும்.
காடுகளுக்கு மத்தியில் ஒரு கோயில்
மலே மகாதேஸ்வரா குன்றின் பிரபலத்துக்கு முக்கிய காரணமாக விளங்கி வருவது மகாதேஸ்வரா கோயிலே ஆகும். இந்தக் கோயிலை சுற்றி கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை சேர்ந்த 77 குன்றுகள் அமைந்திருக்கின்றன.
இதன் முதன்மை தெய்வமான மகாதேஸ்வரா, சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்று என்று புராணம் கூறுகிறது. இப்பகுதியை சேர்ந்த மக்களும், மகாதேஸ்வரர் இந்தக் குன்றில் கடும்தவம் புரிந்ததாகவும், இப்போதும் இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் வடிவில் மகாதேஸ்வரர் வாழ்ந்து வருவதாகவும் நம்புகின்றனர்.
மகாதேஸ்வரா கோயிலில் உள்ள இயற்கை நீரூற்றான அந்தாரகங்கெவின் நீர் புனித தீர்த்தமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இது எங்கிருந்து தோன்றுகிறது என்பது இன்றுவரையிலும் மர்மமாகவே இருக்கிறது.
மலே மகாதேஸ்வரா குன்றுகளின் காடுகள் முழுக்க சந்தன மரங்களாலும், மூங்கில்களாலும் சூழப்பட்டது. இந்தக் காடுகளில் யானைகள், புள்ளி மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதோடு இங்கு வரும் பயணிகளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மிக அரிதாக சிறுத்தையை கூட பார்க்கலாம்.
மலே மகாதேஸ்வரா குன்றிலுள்ள சில பகுதிகள் ஒரு காலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு பதுங்குமிடமாக இருந்து வந்தது. பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் மலே மகாதேஸ்வரா குன்றுக்கு இயக்கப்படுகின்றன.