மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சம் இந்த மௌண்ட் அபு காட்டுயிர் சரணாலயம் ஆகும். ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள 19 கி.மீ நீளம் மற்றும் 5-8 கி.மீ அகலம் உடைய ஒரு சமவெளிப்பகுதியில் இது அமைந்துள்ளது.
1960ம் ஆண்டில் இந்த வனப்பகுதி காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலவிதமான தாவரங்கள் மற்றும் உயிரனங்களைக் கொண்டுள்ள இது இயற்கை ரசிகர்கள் மற்றும் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பிடித்தமான சரணாலயமாக திகழ்கிறது. 820க்கும் மேற்பட்ட தாவரவகைகள் இங்கு காணப்படுகின்றன. பலவகையான ‘ஆர்க்கிட்’ மலர்களையும் இங்கு பார்க்க முடிகிறது.
தாவரங்களின் பசுமையான அழகு மட்டுமன்றி இங்கு வசிக்கும் பலவகையான உயிரினங்களுக்காகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது. அருகி வரும் உயிரின வகைகள் சில இந்த சரணாலயத்தில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கங்கள் மற்றும் புலிகள் ஆகிய பெரிய விலங்குகள் இங்கு வசித்திருந்தாலும் தற்சமயம் சிறுத்தைகள் மட்டுமே இங்கு காணப்படுகின்றன. தவிர, சாம்பார் மான், காட்டுப்பன்றி, கரடி, குள்ளநரி, இந்திய நரி, ஒநாய், கழுதைப்புலி, பூனைக்கரடி மற்றும் காட்டுப்பூனை ஆகிய விலங்குகளும் இங்கு வசிக்கின்றன.