உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது முசூரி. சிவாலிக் மலைகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கின் எழில்மிகு தோற்றத்தை முசூரியில் இருந்து காணலாம். மேலும் மத ஸ்தலங்களான யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களின் நுழைவாயில் என்றும் முசூரி அழைக்கப்படுகிறது.
மன்சூர் என வழங்கப்படும் ஒரு மூலிகைச் செடி இங்கு அதிக அளவில் காணப்படுவதால் அப்பெயரில் இருந்தே இவ்விடத்திற்கு முசூரி என்ற பெயர் வந்தது. உள்ளூர் மக்கள் இவ்விடத்தை மன்சூரி என்றே அழைக்கிறார்கள்.
இயற்கை எழில் வாய்ந்த இம்மலைப்பகுதி, இங்குள்ள பழங்கால கோவில்கள், நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்காக புகழ்பெற்று விளங்குகிறது. ஜ்வாலா தேவி கோவில், நாக தேவதை கோவில் மற்றும் பத்ராஜ் கோவில் ஆகியவை இங்குள்ள புகழ்பெற்ற கோவில்களாகும்.
இந்துக் கடவுளான துர்காவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஜ்வாலா தேவி கோவில் கடல் மட்டத்தில் இருந்து 2100மீ உயரத்தில் அமைந்துள்ளது. கல்லால் செய்யப்பட்ட சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இக்கோவில் இந்துக்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது.
இங்குள்ள மற்றொரு புகழ்பெற்ற கோவிலான நாக தேவதை கோவில் நாக ராஜாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாக பஞ்சமி விழாவின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இங்கு புகழ்பெற்ற குன்றுகளான கன், லால் மற்றும் நாக் ஆகியவை அமைந்திருக்கின்றன. கன் ஹில் கடல் மட்டத்தில் இருந்து 2122மீ உயரத்தில் உள்ளது. முசூரியின் இரண்டாவது உயரமான மலை உச்சியான இவ்விடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் உள்ளூர் மக்களுக்கு நேரம் தெரிவிக்கும் பொருட்டு மதிய வேளையில் இங்கு பீரங்கி வெடிக்கப்பட்டது. அந்த சத்தத்திற்கு ஏற்ப மக்கள் தங்கள் கடிகாரத்தை சரிப்படுத்திக் கொண்டார்கள்.
முசூரியின் தண்ணீர் தொட்டி கன் ஹில்லில் அமைந்துள்ளது. கயிற்றுப் பாதையில் கன் ஹில்லுக்கு பயணப்படுவதை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள்.
முசூரியின் லால் டிப்பா மலை உச்சியே முசூரியின் மிகவும் உயரமான முனையாக கருதப்படுகிறது. லால் டிப்பா பகுதியில் 'டிப்போ' எனப்படும் சேகரிப்பு மையம் அமைந்துள்ளதால் டிபோட் ஹில் என்றும் கருதப்படுகிறது.
அனைந்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் டவர்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவ முகாமும் இந்தக் குன்றில் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 1967ல் அமைக்கப்பட்ட தொலைநோக்கியின் (தொலைநோக்கி) வழியாக பந்தர்பஞ்ச், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களை கண்டு ரசிக்கலாம். பாம்பின் முனை என அழைக்கப்படும் நாக் டிப்பா குன்றும் முசூரியில் அமைந்துள்ளது .சுற்றுலாப் பயணிகள் சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழலாம்.
மேலும் இங்கு அமைந்திருக்கும் அழகிய நீர்வீழ்ச்சிகளான கெம்ப்டி நீர்வீழ்ச்சி, ஜாரிபானி நீர்வீழ்ச்சி, பட்டா நீர்வீழ்ச்சி மற்றும் மொசி நீர்வீழ்ச்சி ஆகியவை புகழ்பெற்றவைகளாகும்.
கடல் மட்டத்தில் இருந்து 4500கிமீ உயரத்தில் அமைந்திருக்கும் கெம்ப்டி நீர்வீழ்ச்சி முசூரி வரும் சுற்றுலாப்பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது. இந்நீர்வீழ்ச்சியின் அழகில் மயங்கி ஜான் மெக்கினன் என்ற ஆங்கிலேய அதிகாரி இவ்விடத்தை சுற்றுலா தளமாக உருவாக்கினார்.
ஜாரிபானி கிராமத்தில் அமைந்திருக்கும் ஜாரிபானி நீர்வீழ்ச்சி சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்ட மக்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. பட்டா மற்றும் மொசி நீர்வீழ்ச்சிகள் மூசூரியில் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்துள்ளன.
சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல் மூசூரி புகழ்பெற்ற கல்வி நிலையங்களையும் கொண்டு விளங்குகிறது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பல ஐரோப்பிய பள்ளிகள் இங்கு செயல்படுகின்றன.
மேலும் பழமையான தங்குமிடப் பள்ளிகளான செயிண்ட் ஜார்ஜ், ஓக் க்ரூவ் மற்றும் வைன்பர்க் ஆலன் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன. மலையேற்றத்திற்கும் புகழ்பெற்ற இடமாக முசூரி விளங்குகிறது. இயற்கை சூழலில் நடப்பதற்கு உகந்த பல பாதைகளையும் மூசூரி கொண்டுள்ளது.
மூசூரி இந்தியாவின் முக்கியமான நகரங்களுடன் விமான, ரயில் மற்றும் தரைவழி போக்குவரத்துகளைக் கொண்டுள்ளது. மூசூரியில் இருந்து 60கிமீ தொலைவில் இருக்கும் டெஹ்ராடூன் விமானநிலையமே மூசூரிக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். மேலும் முசூரிக்கு நெருக்கமான ரயில் நிலையமும் டெஹ்ராடூனிலேயே அமைந்துள்ளது.
வருடம் முழுவதும் சீரான வானிலை நிலவுவதாலும், எல்லா பருவங்களிலும் முசூரி அழகுடன் விளங்குவதாலும் வருடத்தின் எல்லா மாதங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். எனினும் மார்ச் முதல் ஜூன் வரையிலும், செப்டம்பர் முறை நவம்பர் வரையிலும் முசூரி செலவது பரிந்துரைக்கப்படுகிறது.