மைசூர் வரும் சுற்றுலா பயணிகள் இந்த நகரின் பழமை வாய்ந்த கட்டிடங்களின் ஒன்றான ஜகன்மோகன் அரண்மனையை பார்க்காமல் திரும்புவதில்லை. மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் ராஜ குடும்பத்தினர் 1897ல் வசித்த தாக சொல்லப்படுகிறது.
பழைய அரண்மனை தீ விபத்தில் அழிந்த பின்னர் புதிய அரண்மனை கட்டப்படும் வரை ராஜ குடும்பத்தினர் இந்த ஜஹன் மோகன் அரண்மனையில் வசித்துள்ளனர்.1902 ஆம் ஆண்டு இந்த அரண்மனையை உரிமையாக்கிக் கொண்ட நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் அப்போது நடத்திய விழாவுக்கு பிரிட்டிஷ் வைசிராய், இந்திய கவர்னர் ஜெனரல் மற்றும் லார்டு கர்சன் போன்ற முக்கிய பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர்.
இப்போதும் சுற்றுலாப் பயணிகள் இந்த அரண்மனையில் நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் திருமணத்தின் போது அமைக்கப்பட்ட திருமண விதானத்தை பார்க்கலாம். தர்பார் ஹால் என்றும் அறியப்படும் இந்த விதானத்தில்தான் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் தன் பிறந்த நாள் விழாக்களை விமரிசையாக கொண்டாடுவார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த அரண்மனையின் விசாலமான அரங்குகள் இசை விழாக்கள், நாடகம் போன்ற இதர கலை நிகழ்ச்சிகள் மற்றும் மைசூர் பலகலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாக்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டன. தற்சமயம் இந்த அரங்குகள் கலை நிகழ்ச்சிகளுக்கும் தசராவின்போது நட்த்தப்படும் மாநாடுகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
இங்கு விஷ்ணுவின் தசாவதார காட்சியை சிற்ப வடிவமாய் செதுக்கப்பட்டுள்ள இரண்டு பெரிய மரக்கதவுகளும், மைசூர் மஹாராஜாக்களின் ஓவியங்களும் அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களும் பார்க்க வேண்டிய அம்சங்களாய் உள்ளன.