மைசூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது கரஞ்சி லேக்கை கண்டிப்பாக தவற விட்டுவிடக்கூடாது. இந்த ஏரியை சுற்றி அமையப்பெற்றுள்ள இயற்கை பூங்காவில் பட்டாம்பூச்சி பூங்காவும், இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் பண்ணை ஒன்றும் அமைந்துள்ளன.
கரஞ்சி லேக் 90 ஏக்ரா பரப்பளவில் அமைந்துள்ள மைசூர் மிருகக்காட்சி சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதோடு கரஞ்சி லேக் 55 ஏக்ரா அளவிற்கு பரந்து கிடப்பதால் மிருகக்காட்சி சாலையின் முக்கால்வாசி இடம் ஏரி நீரால் சூழப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகள் ஏரியில் படகுப் பயணம் செய்து மகிழலாம்.
பறவைகள் பண்ணை
இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் பண்ணையாக கரஞ்சி லேக்கில் உள்ள பண்ணை அறியப்படுகிறது. 60 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பறவைகள் பண்ணை 3.8 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. இங்கு இருவாய்க்குருவி, கருப்பு அன்னப் பறவை, வான்கோழி, மயில் போன்ற பறவைகளை கண்டு ரசிக்கலாம்.
பட்டாம்பூச்சி பூங்கா
கரஞ்சி லேக்கில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பூங்கா அமைதியாக நேரத்தை கழிக்க மிகவும் ஏற்ற இடம். இங்கு பரந்து விரிந்து கிடக்கும் மலர் பூங்காவில் 45 வகையான பட்டாம்பூச்சி இனங்களை காணலாம்.
அதோடு தேன் சுரக்கும் பூக்களை கொண்ட செடிகளை நட்டு மேலும் சில பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் நிறைய செடிகள் பூங்காவில் நடப்பட்டு வருகின்றன.
புலம்பெயர் பறவைகள்
கரஞ்சி லேக்கில் செங்கால் நாரை, கூழைக்கடா, ஐபிஸ், உண்ணிக் கொக்கு, சாம்பல் நாரை, உள்ளான், கரிச்சான் குருவி உள்ளிட்ட புலம்பெயர் பறவைகளை பார்க்க முடியும். இந்த ஏரி காலை 8.30 மணியிலிருந்து, 5.30 மணிவரை திறந்திருக்கும். அதோடு மைசூரின் மற்ற பகுதிகளிலிருந்து கரஞ்சி லேக்கை மாநகராட்சி பேருந்து மூலமாக சுலபமாக அடைந்து விட முடியும்.