மைசூருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள வன விலங்கு காட்சியகத்துக்கு தவறாது செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 1892 ம் ஆண்டு மஹாராஜா சாமராஜ உடையாரால் கட்டப்பட்ட இந்த வன விலங்கு காட்சியகம் இந்தியாவிலேயே புகழ் பெற்று விளங்கும் வன விலங்கு பூங்காவாகும்.
250 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வன விலங்கு பூங்காவில் பல அபூர்வ வகை விலங்குகளும், பறவைகளும், ஊர்வன பிரிவு விலங்குகளும் காணப்படுகின்றன.இந்த வனவிலங்கு பூங்கா ஆரம்பத்தில் அரண்மனை விலங்குக் கூடம் என்று அழைக்கப்பட்டு இதனுள் அரச குடும்பத்தினரும் விருந்தினர்களும் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். பின்னர் மஹாராஜா சாமராஜ உடையார் இங்கு பொது மக்களும் நுழைவதற்கான அனுமதியை வழங்கினார். 1909ம் ஆண்டு இது ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த மைசூர் வன விலங்கு காட்சியகத்தில் அழிந்து வரும் பல அரிய வகை விலங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக திட்டமிட்ட இனப்பெருக்க முறைகள் மற்ற பராமரிப்பு திட்டங்களுடன் சேர்த்து செயல்படுத்தப் படுகின்றன.
யானைக்குட்டிகள், மனிதக்குரங்கு குட்டிகள், காட்டெருமை, சிறுத்தை, மற்றும் புலிக்குட்டிகள் போன்றவற்றை இங்கு காணலாம். இங்கு பலவகை விலங்குகள் இனவிருத்தியும் செய்யப்படுகின்றன.
பார்பெரி மலை ஆடு, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, ஈமு, சிம்பன்ஸி, நீர் யானை, கங்காரு, புலி போன்றவை இனவிருத்தி செய்யப்படும் விலங்குகளில் சில.
அது தவிர பல அரிய வகை விலங்குகளான எலி மான், நான்கு கொம்பு காட்டு மான், கேரக்கேல் எனும் அதிசய காட்டு பூனை, சிவட் எனும் உடும்பு வகை, நீலகிரி லாங்குர் எனப்படும் கருங்குரங்கு , சிங்காரா எனும் அரிய வகை கலைமான், பின்டுராங் என்று அழைக்கப்படும் அதிசய பூனைக்கரடி, சிறுத்தை போன்றவை இந்த வன விலங்கு காட்சியகத்தில் பராமரிக்கப்படுகின்றன.