ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக நக்கர் எனும் இந்த புராதன நகரம் அமைந்துள்ளது. இது குல்லு மாவட்டத்தின் தலைநகரமும் விளங்கியிருக்கிறது. அருமையான இயற்கைக்காட்சிகளை பயணிகளுக்கு வழங்கும் இந்த சுற்றுலாத்தலம் குறிப்பாக வடமேற்கு பள்ளத்தாக்குகளின் அழகை ரசிப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கிறது. விசுத்பால் மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட இந்நகரமானது 1460ம் ஆண்டில் ஜகத்சிங் மன்னர் இதனை கைப்பற்றி தலைநகரை சுல்தான்பூருக்கு (தற்போதைய குல்லு) மாற்றும்வரையில் குல்லு ராஜ்ஜியத்தின் தலைநகரமாகவும் இருந்துள்ளது.
நக்கர் சுற்றுலாத்தலத்தில் சுற்றிப்பார்த்து ரசிப்பதற்கான ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஜகதிபட் மற்றும் நக்கர் கோட்டை ஆகிய இரண்டும் பிரதான அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள நக்கர் கோட்டை தற்போது ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டு பியாஸ் ஆற்றங்கரையின் அழகை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இவை தவிர, நிக்கோலாஸ் ரியோரிச் ஆர்ட் காலரியில் ரஷ்ய ஓவியரான நிக்கோலாஸ் ரோலரிச் மற்றும் அவரது மகன் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
தக்போ ஷெத்ருப்லிங் எனப்படும் மடாலயமும் இங்கு பியாஸ் ஆற்றின் இடது கரையில் வீற்றுள்ளது. இது தலாய் லாமா அவர்களால் 2005ம் ஆண்டில் திறக்கப்பட்டுள்ளது.
ஆன்மீக யாத்ரீகர்கள் விரும்பும் படியாக எண்ணற்ற கோயில்கள் இந்த நக்கர் நகரத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் திரிபுர சுந்தரி கோயில், சாமுண்ட பகவதி கோயில் மற்றும் முரளிதர் கோயில் ஆகியவை கட்டிடக்கலை அம்சங்களுக்கும் திருவிழாக்களுக்கும் புகழ்பெற்று அறியப்படுகின்றன.
நக்கர் சுற்றுலாத்தலம் சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களான மீன் பிடிப்பு, டிரக்கிங் மற்றும் ஆற்று படகுப்பயணம் போன்றவற்றுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. தூண்டில் மீன் பிடிப்பில் ஆர்வம் உள்ள பயணிகள் பியாஸ் ஆற்றில் இந்த பொழுது போக்கில் ஈடுபடலாம்.
பிரம்மாண்டமான இமயமலையின் அடிவார மலைகளில் உள்ள சந்தர்கனி பாஸ், ஜலோரி பாஸ் மற்றும் பின் பார்வதி பாஸ் போன்ற மலைப்பாதைகள் ட்ரெக்கிங் எனும் மலையேற்றத்திற்கு உகந்ததாக அமைந்துள்ளன.
நக்கர் சுற்றுலாத்தலத்துக்கு பயணிகள் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். ஏப்ரல் முதல் ஜூலை வரையான பருவம் இங்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. நக்கர் சுற்றுலாத்தலத்தின் குளிரை அனுபவிக்க விரும்பும் பயணிகள் குளிர்காலத்திலும் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.