ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள நஹன் நகருக்கு அருகில் அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் சுகெட்டி பாஸில் பூங்கா ஆகும். நஹன் நகரத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த பூங்காவை சுற்றுலாப் பயணிகள் எளிதில் அடைய முடியும்.
இந்த பூங்காவை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனமும், ஹிமாச்சல பிரதேச அரசும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த பூங்கா கவனமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே முதன் முறையாக பாஸில்கள் கண்டுபிடிக்கப்பட்ட பூங்கா இதுதான்.
பல்வேறு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆராய்ச்சிக்காக இந்த பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். ஃபைபர் ரி-இன்போர்ஸ்டு பிளாஸ்டிக்கினால் (FRP) செய்யப்பட்ட வரலாற்று காலத்திற்கு முந்தைய விலங்குகளின் உருவங்கள் அவற்றின் வாழும் கால உருவ அளவுகளில் இந்த பூங்காவிற்குள் வைக்கப்பட்டுள்ளன.
மார்கண்டா நதியின் அழகிய கரைகளில் அமைந்துள்ள இந்த பூங்காவில் வரலாற்று காலத்திற்கு முந்தைய விலங்குளான ஸ்டெகோடோன்கனேசா (அழிந்துபோன யானைகளின் மூதாதையர்), சிவதெரியம், கலோஸ்ஸெலிஸ் அட்லஸ் (ராட்சச ஆமை மற்றும் கெலோனியா), பாரமாகெய்ர்டஸ் (வளைந்த பற்களையுடைய புலி), ஹெக்ஸாப்ரோடோடன்-சிவாலென்சிஸ் (முன்வாய் பகுதியில் ஆறு பற்களையுடைய நீர்யானை) ஆகிய விலங்குகள் அவை வாழ்ந்த காலத்தில் இருந்த அளவுகளிலேயே செய்யப்பட்டு 6 ஜோடிகளாக வைக்கப்பட்டுள்ளன.
இங்கிருக்கும் அனைத்து புதைபடிவங்கள் மற்றும் எலுப்புக்கூடுகள் தொல்பொருள் ஆய்வாளர்களால் தோண்டியெடுக்கப்பட்டு, வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பல்லுயிர் வகைப்பாடுகளை அறிவதற்காக கவனமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இமயமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மிருதுவான மணல்குன்றுகள் மற்றும் களிமண் பாறைகளை உடைய இடமாகவும் இருக்கும் சிவாலிக் மலைத்தொடரின் நடு மற்றும் மேல் பகுதிகளில் இந்த பூங்கா அமைந்துள்ளது.