‘இந்தியாவின் ஏரி மாவட்டம்’ என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் வீற்றிருக்கிறது. குமாவூங் என்றழைக்கப்படும் மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்நகரம் அற்புதமான ஏரிகளை வாய்க்கப்பெற்றிருக்கிறது.
மும்முனிவர் தீர்த்தம் என்று ஸ்கந்த புராணத்தில் இந்த நைனித்தால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மும்முனிவர் என்பது ஆதி ரிஷிகளாகிய அத்ரி, புலஸ்த்யா மற்றும் புலஹா ஆகிய மூவரை குறிப்பிடுகிறது.
தங்களது யாத்திரையின் இந்த மூன்று ரிஷிகளும் தாக சாந்தி செய்து கொள்ள நைனித்தால் பகுதியில் தங்கியதாகவும், இங்கு ஒரு குழியை தோண்டி தங்களுடன் எடுத்து வந்த மானஸரோவர் தீர்த்தத்தை அதில் நிரப்பியதாகவும் அதுவே பின்னர் நைனித்தால் ஏரியாக மாறியது என்பதாகவும் ஐதீகக்கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மற்றொரு புராணிகக்கதையின்படி சிவனின் மனைவியான சதியின் இடது கண் இப்பகுதியில் விழுந்து இப்படி கண் வடிவத்தில் ஏரியாக மாறிற்று என்று சொல்லப்படுகிறது.
வெகு அமைதியான சூழலும் சொர்க்கம் போன்ற இயற்கை அழகும் வாய்க்கப்பெற்றிருக்கும் நைனித்தால் சுற்றுலாப்பயணிகளிடையே பரவலாக புகழ் பெற்று விளங்குகிறது. 1839ம் ஆண்டில் இந்த இடத்தின் இயற்கை அழகால் கவரப்பட்ட பி. பாரோன் எனும் ஆங்கிலேய வணிகர் இங்கு குடியிருப்புகளை நிர்மாணித்துள்ளார்.
நைனித்தால் நகருக்கு வருகை தரும் பயணிகள் ஹனுமான்கிரி எனும் பிரசித்தமான ஹனுமான் கோயிலையும் தரிசிக்கலாம். இது தவிர இந்தியாவிலுள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றான நைனா தேவி கோயிலும் இப்பகுதியில் அமைந்துள்ளது.
நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்திலியே கில்பரி எனும் அழகிய பிக்னிக் ஸ்தலமும் அமைந்துள்ளது. ஓக் மற்றும் பைன் மரங்கள் அடர்ந்த பசுமையான இந்த காட்டுப்பகுதி இயற்கையின் மடியில் ஏகாந்தமாக பொழுதை போக்க ஏற்ற இடமாகும்.
மேலும் இங்கு 580 வகையான வண்ணமயமான பறவைகளும் வசிக்கின்றன. பிரவுன் வுட் ஆந்தை, காலர்ட் க்ராஸ்பீக் பறவை மற்றும் சிரிக்கும் குயில் போன்ற அபூர்வ பறவைகளை இப்பகுதியில் காணலாம்.
மேலும், நைனித்தால் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் லரியாகண்டா எனும் சிகரமும் உள்ளது. இது இப்பகுதியிலேயே இரண்டாவது உயரமான சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 2481மீ உயரத்தில் வீற்றிருக்கும் இந்த சிகரத்திலிருந்து சுற்றிலும் பரந்திருக்கும் இயற்கைக்காட்சிகளை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
லேண்ட்ஸ் என்ட்’எனும் மற்றொரு இடம் குர்பதால் ஏரியின் அழகை பார்த்து ரசிக்க ஏதுவாக அமைந்திருக்கிறது. சுற்றிலும் காணப்படும் மலைக்காட்சிகள் மற்றும் பள்ளத்தாக்குளையும் இங்கிருந்து தரிசிக்கலாம்.
கயிற்று கார்கள் மூலம் இந்த இடத்துக்கு பயணிகள் செல்ல வேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 705 மீட்டர் தூரத்தை கடக்கும்படி அமைக்கப்பட்டுள்ள இந்த கயிற்றுக்கார் பாதையில் ஒரு காரில் அதிகபட்சம் 12 பேர் பயணிக்கலாம்.
இப்படி இந்த கயிற்றுக்கார் மூலம் பயணித்து ஸ்னோ வியூ எனும் மலைக்காட்சி தளத்தை அடைந்து அங்கிருந்து இமயமலைதொடர்களின் அழகை பயணிகள் பார்த்து மகிழலாம்.
நைனா பீக் அல்லது சைனா பீக் என்றழைக்கப்படும் சிகரம் நைனித்தால் பகுதியின் மிக உயரமான சிகரமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2611 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
குதிரைச்சவாரி மூலம் இந்த சிகரத்தை சென்றடையலாம். இப்பகுதியில் உள்ள டிஃபன் டாப் அல்லது டோரதி சீட் எனும் இடம் பயணிகளை மகிழ்வூட்டும் அம்சங்களை கொண்ட பிக்னிக் ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த பிக்னிக் ஸ்தலம் டோரதி கெல்லட் எனும் ஆங்கிலேய ஓவியரின் நினைவாக அவரது கணவரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. டோரதி இப்பகுதியில் ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈகோ கேவ் கார்டன் எனும் மற்றொரு புகழ் பெற்ற சுற்றுலா அம்சமும் பயணிகளுக்கு சுற்றுச்சூழல் மாசுபடா வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ராஜ் பவன், விலங்கியல் காட்சிக்கூடம், தி ஃப்லாட்ஸ், தி மால், செயிண்ட் ஜான் இன் த வைல்டர்னஸ் சர்ச் மற்றும் பங்கோட் ஆகியவை நைனித்தால் நகரிலுள்ள இதர முக்கிய சுற்றுலா அம்சங்களாகும்.
தண்டி சதக், கர்னி ஹவுஸ், குர்பதால், குவானோ ஹில்ஸ் மற்றும் அரவிந்தர் ஆசிரமம் போன்று இடங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். பார்க்க வேண்டிய இடங்கள் மட்டுமல்லாமல் அனுபவித்து மகிழவும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு நிறைந்திருக்கின்றன. குதிரைச்சவாரி, மலையேற்றம் மற்றும் படகுச்சவாரி போன்றவை இவற்றில் முக்கியமானவை.
நைனித்தால் நகரம் சாலை, ரயில் மற்றும் விமான மார்க்க போக்குவரத்து வசதிகள் மூலம் நாட்டின் எல்லா பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. கோடைக்காலத்தில் நைனித்தாலுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.