நைனா லேக் எனும் இந்த ஏரி நைனித்தால் சுற்றுலாத்தலத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இந்த ஏரியில் சுற்றுலாப்பயணிகள் சொகுசுப்படகு சவாரி, துடுப்புப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடலாம்.
சிவபெருமான் தனது மனைவியான சதியை கைலாச பர்வதத்தை நோக்கி தூக்கி சென்றபோது சதியின் இடது கண் இப்பகுதியில் விழுந்து இப்படி கண் வடிவத்தில் ஏரியாக மாறியதாக ஐதீகக்கதைகள் வழங்கி வருகின்றன.
மேலும் மும்முனிவர் தீர்த்தம் அல்லது திரி-ரிஷி சரோவர் என்ற பெயரிலும் இந்த ஏரி அழைக்கப்படுகிறது. இந்த ஏரியானது பழமையான ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த புராணத்தின்படி ஆதி ரிஷிகளாகிய அத்ரி, புலஸ்த்யா மற்றும் புலஹா ஆகிய மூவரும் தங்களது யாத்திரையின்போது தாக சாந்தி செய்து கொள்ள நைனித்தால் பகுதியில் தங்கியதாகவும், இங்கு குளம் ஏது இல்லாததால் ஒரு குழியை தோண்டி தங்களுடன் எடுத்து வந்த மானஸரோவர் புனித தீர்த்தத்தை அதில் நிரப்பியதாகவும் அதுவே இந்த நைனி ஏரியாக மாறியது என்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
மிகவும் நீளமான இந்த நைனி ஏரியின் வட முனை மல்லித்தால் என்றும் தென்முனை தல்லித்தால் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு பாலத்தையும் அதன் மீது ஒரு தபால் நிலையத்தையும் கொண்டிருக்கும் ஒரே வித்தியாசமான ஏரி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேருந்து நிலையம், டாக்சி நிறுத்தம், ரயில் சீட்டு பதிவு மையம் மற்றும் ஷாப்பிங் மையங்கள் போன்றவையும் இந்த ஏரிக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றன.