நல்கொண்டா நகரத்திலிருந்து 84 கி.மீ தூரத்தில் இந்த பாணிகிரி பௌத்த ஸ்தலம் அமைந்துள்ளது. சமீபத்தில் ஆந்திர மாநில அரசின் தொல்லியல் துறையால் இந்த புராதன ஸ்தலம் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பாணிகிரி ஸ்தலத்தில் ஒரு பெரிய வளாகம் போன்ற கட்டுமானம் காணப்படுகிறது. இதில் ஒரு பெரிய ஸ்தூபி மற்றும் ஸ்தூபங்களை உள்ளடக்கிய இரண்டு பெரிய கூடங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.
இந்த வளாகத்தின் அளவைப் பார்க்கும்போது இது அக்காலத்தில் மிகப்பெரிய பௌத்த ஸ்தலமாக திகழ்ந்திருக்க வேண்டுமென்பது புலனாகிறது. இந்த வளாகத்தில் ஓரிடத்தில் பெரிய பாதச்சுவடுகள் காணப்படுகின்றன. இவை புத்தரின் பாதச்சுவடுகளாக நம்பப்படுகின்றன.
இதே வளாகத்தில் புத்த பிக்குகள் வசித்திருக்கக்கூடிய விகாரை அல்லது விகாரங்கள் என்று அழைக்கப்படும் வசிப்பறைகளும் காணப்படுகின்றன. இந்த பாணிகிரி பௌத்த ஸ்தலங்கள் ‘நாகப்பட மலை’ எனும் மலையின் உச்சியில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மலை பார்ப்பதற்கு படமெடுக்கும் பாம்பின் தலையை போன்று காட்சியளிப்பதால் இப்பெயரை பெற்றுள்ளது.