ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள நர்கண்டா நகரத்தின் பனி படர்ந்த மலைச்சரிவுகள் குளிர்காலங்களில் பனிச்சறுக்கு செய்வதற்கு மிகவும் புகழ் பெற்ற இடமாகும். எளிதானது முதல் மிகவும் கடினத்தன்மை வாய்ந்த மாறுபட்ட சரிவுகளை உடைய நர்கண்டா மலைச்சரிவுகள் துவக்க நிலையில் இருப்பவர்களும், அனுபவம் வாய்ந்தவர்களும் பனிச்சறுக்கு செய்ய ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
சிம்லா மற்றும் ராம்பூர் போன்ற நகரங்களை பிரிக்கும் இடமாக நர்கண்டாவின் பனி மூடிய மலைகள் விளங்குகின்றன. ஹிமாச்சல பிரதேசத்தின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு விதமான பனிச்சறுக்கு பயிற்சி வகுப்புகளை இங்கு நடத்தி வருகிறது. டிசம்பர் மாதத்தில் நர்கண்டாவில் தொடங்கும் பனிச்சறுக்கு சீசன் மார்ச் மாதத்தின் இறுதிவரை நீடித்திருக்கும்.