கிர்பால் சாஹர் எனும் இந்த தனித்துவமான ‘ஆன்மீக மனித நேய வளாகம் மற்றும் மையம்’ ரஹோன் நகரத்திற்கு அருகில் உள்ள தரியாபூர் கிராமத்தில் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஒரு உன்னத ஆன்மீக மையமாக இந்த கிர்பால் சாஹர் வளாகம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
தூய்மையும், அழகும், ஆன்மீக நிசப்தமும் நிலவும் இந்த பிரம்மாண்ட வளாகம் பல்வேறு உயரிய நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. மத நல்லிணக்கம், கல்வி, மருத்துவம், சமூக சேவை என்பவையே அந்த அடிப்படை நோக்கங்களாகும்.
ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களும் இந்த ஸ்தலத்திற்கு வருகை தருகின்றனர்.
‘இறைவன் ஒன்றே’ எனும் கருத்தை வலியுறுத்தி பரப்பிய ‘சந்த் கிர்பால் சிங்ஜி’ யின் சீடர்கள் ஆதரவில் ‘ஹர்பஜன்சிங்’ எனும் மாமனிதரின் முயற்சியில் இந்த மஹோன்னதமான ஆன்மீக வளாகம் உருவாகியுள்ளது.
இந்த ஸ்தலத்தின் பிரதான அம்சமாக முட்டை வடிவத்தில் ஒரு தீர்த்தக்குளம் கலையம்சத்துடன் உருவாக்கப்பட்டு காட்சியளிக்கிறது. அதன் நடுநாயகமாக ஹிந்து, முஸ்லிம், சீக்கியம் மற்றும் கிறித்துவம் போன்ற எல்லா மதப்பிரிவுகளின் அடையாளங்களையும் உள்ளடக்கிய ஒரு ‘தனித்துவமான புனிதக்கோயில்’ கம்பீரமாக காட்சியளிக்கிறது.
உயரிய நோக்குடன் வீற்றிருக்கும் இந்த கோயில் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்கிறது. ‘மதங்கள் யாவும் மனித ஒற்றுமைக்கும், மனித சேவைக்கும் அன்றி பிரிவினைக்கும் சுயநலத்துக்கும் அல்ல’ எனும் உன்னத கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிர்பால் சாஹர் வளாகம் அவசியம் பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய ஸ்தலமாகும்.
இது போன்ற அமைப்புகள் ஏன் நாடு முழுதுமே உருவாகாமல் உள்ளன எனும் கேள்வியும், இனம் தெரியாத பரவச உணர்வும் இந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்துவிட்டு திரும்பும்போது உங்களை ஆக்கிரமிக்கக்கூடும்.