நீமுச் அருகே உள்ள மண்ட்சார் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது காந்தி சாகர் அணை. இந்த அணை மத்திய பிரதேசத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகும்.
சாம்பல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மிகவும் பிரம்மாண்ட அணையாகத் திகழ்கிறது காந்தி சாகர் அணை. 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் அடிக்கல் நட்டு பணிகள் துவக்கிவைக்கப்பட்டது இந்த அணை.
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நீர்த்தேக்கமாக திகழும் காந்தி சாகர் அணை, ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு சரணாலயமாகவும் விளங்குகிறது. சர்வதேச பறவைகள் வாழ்வு இயக்கம் இந்த அணைப் பகுதியை பறவைகள் சரணாலயமாக அடையாளப்படுத்தியுள்ளது.
204 அடி உயரமும், 514 அடி நீளமும் கொண்ட இந்த அணையில், நீர் மின்சார நிலையம் அமைக்கப்படுள்ளது. அணையின் தளும்புவாயிலில், ஒரு நொடிக்கு, சுமார் 21,248 கன மீட்டர் நீர் வெளியேறுகிறது என்றால், அணை எந்தளவுக்கு பெரியதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.
சுற்றுலாவாக இருந்தாலும் சரி, ஆராய்ச்சியாக இருந்தாலும் சரி, காந்தி சாகர் அணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.