பசுமையும், இயற்கை எழிலும் சேர்ந்து காட்சியளிக்கும் இந்த நெர்சா எனும் சிறிய கிராமம் உங்களுக்கு ஒரு வித்தியாசமான சுற்றுலாவை அனுபவிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. இது கர்நாடகா-கோவா எல்லையில் மஹடை எனும் செழுமைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது உலகிலுள்ள செழுமையான பன்முக உயிர்ச்சூழல் கொண்ட பள்ளத்தாக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த கிராமம் பறவை ஆராய்ச்சி மற்றும் காட்டுயிர் அம்சங்களில் விருப்பமுள்ள இயற்கை ரசிகர்களுக்கேற்ற சொர்க்கமாக திகழ்வதுடன், ஒரு எளிமையான அழகான கிராமத்து வாழ்க்கை அனுபவத்தையும் அளிக்கிறது.
நெர்சாவில் பார்ப்பதற்கு என்னென்ன உள்ளன
நெர்சா இயற்கையின் வனப்பை கொஞ்சமும் குறையாமல் வாரி வழங்குகிறது. இங்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பசுமையான மலைகளும், அடர்ந்த வனப்பகுதியும் மலை ஏற்றத்துக்கு உகந்த ஸ்தலமாக விளங்குகின்றன.
நெர்சா பயணத்தின்போது இங்கு அருகாமையில் உள்ள இதர சுற்றுலாத்தலங்களான பீம்கர், கொங்க்லா, அப்னலி மற்றும் ஜம்காவ்ன் போன்றவற்றுக்கும் விஜயம் செய்யலாம். இவற்றில் பல ஸ்தலங்களை கால்நடையாக மட்டுமே சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான மலையேற்றப் பயணம் உண்மையான இயற்கை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்தமானதாக இருக்கும். நூற்றுக்கணக்கான பறவை இனங்கள், பலவிதமான வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் விதவிதமான தாவரவகைகள் போன்றவற்றை காணும் அனுபவம் இந்த கடின பயணத்துக்கு பரிசாக கிடைக்கும்.
நெர்சா ஸ்தலத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் இங்கு தலேவடி எனும் இடத்தில் காணப்படும் வௌவால்களாகும். இங்கு 40 வகையான வௌவால்கள் வசிக்கின்றன. லொண்டா வனப்பகுதியில் பரபேடி எனும் குகையில் இத்தகைய 200 க்கும் மேற்பட்ட வௌவால்கள் வசிக்கின்றன.
நெர்சாவுக்கு அருகில் கானாபூர் ரயில்நிலையம் உள்ளது. பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த நெர்சா கிராமம் 500 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு இரவும் பெங்களூரிலிருந்து இயக்கப்படும் சொகுசு பஸ்கள் மூலமாகவும் நெர்சாவுக்கு பயணிக்கலாம்.