நீலம்பூருக்கு அருகிலுள்ள ஒரு சிறு கிராமமான இந்த அருவக்கோட் மட்பாண்ட தயாரிப்புகளுக்கான கேந்திரமாக உலகப்புகழ் பெற்றுள்ளது. ‘கும்பாரன்’ எனும் பாரம்பரிய குயவர் வம்சாவளியினரை மிகுதியாக கொண்டுள்ள இந்த குயவுத்தொழில் கிராமம் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகளையும் பார்வையாளர்களையும் ஈர்க்கிறது.
பிரபல ஓவிய சிற்பக்கலைஞரான கே.பி.ஜீனன் இந்த கிராமத்தில் ‘கும்பம் கைவினைக்கலை திட்டம்’ எனும் முயற்சியை தொடங்கிய பின்னர் இது இந்திய பாரம்பரியக்கலைச்சூழலில் புதிய கவனத்தை பெற்றது.
சுமார் 100 குடும்பங்கள் இந்த கிராமத்தில் பாரம்பரிய மட்பாண்டங்கள், சுடுமண் தோட்டச்சிற்பங்கள், கட்டிடக்கலை அழகுப்பொருட்கள் மற்றும் உபயோக பொருட்கள் போன்றவற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ‘அருவக்கோட் குயவர் கிராமம்’ என்றே தற்போது இந்த கிராமம் அழைக்கப்படுகிறது.
குடிசைத்தொழில்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த கிராமத்தின் வளர்ச்சி மிக சுவாரசியமான நம்பிக்கையூட்டும் உதாரணமாக விளங்குகிறது. கைவினை தொழில் திறமை வாய்க்கப்பெற்ற திறனாளிகள் நிரம்பியிருந்தபோதிலும் ‘உலகமயம்’ எனும் நவீனச்சூழலின் தாக்கம் காரணமாக இக்கிராமத்தின் பொருளாதார நிலை சீரிகுலையும் நிலை ஏற்பட்டது.
ஏனெனில் மண்பாத்திரங்களுக்கு மாற்றான விலை குறைவான பல பொருட்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் கே.பி.ஜீனன் அவர்களது தலைமையில் முயற்சிகள் தொடங்கப்பட்டு கலைஞர்களுக்கான புதிய மாற்றுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இன்று ‘கும்பம் கைவினைக்கலை திட்ட’த்தின் கீழ் 500 வகையான தனித்தன்மை வாய்ந்த அழகு வடிவமைப்புகள் பெருமையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கிராமிய சூழலை ரசித்தபடி ஊர் சுற்றிப்பார்க்கவும், மட்பாண்ட கலை வடிவங்களை பார்த்து ரசிக்கவும் இது மிகவும் உகந்த இடமாகும். சுடுமண் அழகு பொருட்களை விற்கும் கடைகளும் இங்கு உள்ளன. எனவே பயணிகள் தாம் விரும்பும் அழகுபொருட்களை வாங்கி ஊருக்கு எடுத்து வரலாம்.