கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் அமைந்துள்ள நூப்ரா பள்ளத்தாக்கு, உண்மையில் 'பூக்களின் பள்ளத்தாக்கு' என்று பொருள்படும் 'ல்டும்ரா' என்று அழைக்கப்படும் பெயரையுடைய இடமாகும்.
கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பூக்களின் அணிவகுப்பைக் காண முடியும். கி.பி.7-ம் நூற்றாண்டில் தொடங்கும் இந்த பகுதியின் வரலாற்றில் சீனர்கள், மங்கோலியர்கள் மற்றும் அரேபியர்களின் படையயெடுப்புகளும் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமிற்கு முன்னதாக பௌத்த மதம் கோலோச்சி வந்த இடமாக நூப்ரா இருந்துள்ளது.
நூப்ரா பள்ளத்தாக்கை அடையும் வழியில் உலகத்திலேயே உயரமான இடத்திலிருக்கும் கார்டுங் லா கணவாயை, லே-யில் இருந்து கடக்க வேண்டும். கார்டுங் லா கணவாய் வருடம் முழுவதுமே பனி படர்ந்து கிடக்கும் இடமாகும்.
இந்த கணவாய் பாதையை பராமரிக்கும் பணியை எல்லைப்புற சாலைகள் நிறுவனம் செய்து வருகிறது. நூப்ரா பள்ளத்தாக்கின் முக்கியமான பார்வையிடங்களாக பனாமிக் கிராமம், என்ஸா மடாலயம் மற்றும் டிஸ்கிட் மடாலயம் ஆகியவை உள்ளன.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10442 அடி உயரத்தில் உள்ள பனாமிக் கிராமம், அதன் எல்லையிலுள்ள வெந்நீரூற்றிற்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். என்ஸா கோம்பா என்று அழைக்கப்படும் என்ஸா மடாலயமும் இந்த கிராமத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பௌத்த மடாலயமான டிஸ்கிட் மடாலயம், மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய மடாலயங்களில் ஒன்றாக உள்ள முக்கியமான சுற்றுலா தலமாகும்.
நூப்ரா பள்த்தாக்கினை சுற்றிப் பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள் இவ்விடத்தை விமானம் மற்றும் இரயில் பயணம் மூலம் அடைந்து விட முடியும். நூப்ராவிற்கு அருகிலுள்ள விமான நிலையமாக லே விமான நிலையமும், அருகிலுள்ள இரயில் நிலையமாக ஜம்மு இரயில் நிலையமும் உள்ளது.
வருடம் முழுவதும் நல்ல பருவநிலையை கொண்டிருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் ஜுலை முதல் செப்டம்பர் மாதங்களில் நூப்ரா பள்ளத்தாக்கிற்கு வருவது நல்ல அனுபவத்தை தரும்.