ஜார்கண்ட் மாநிலத்தில் ‘பாகுர்’ என்ற பெயரில் அமைந்திருக்கும் நகரம் மற்றும் மாவட்டமானது பீடி தொழிலுக்கு பெயர் பெற்றிருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களின் ஜீவாதாரமாக இந்த தொழில் இருந்து வருகிறது.
சாஹிப் கஞ்ச் மாவட்டத்தின் அங்கமாக இருந்து வந்த இந்த பாகுர் பகுதி 1994ம் ஆண்டு தனி மாவட்ட அந்தஸ்து பெற்றது. இதன் வடக்கில் சாஹிப்கஞ்ச் மாவட்டம், தெற்கில் மேற்கு வங்காளத்தின் பீர்பூம் மாவட்டம், கிழக்கில் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் மாவட்டம் மற்றும் பீர்பூம் மாவட்டத்தின் ஒரு பகுதி, மேற்கில் தும்கா மற்றும் கொட்டா மாவட்டங்கள் ஆகியவற்றை தனது எல்லைகளாக கொண்டுள்ளது.
அடர்ந்த, பரந்த வனப்பகுதிகளை ஒரு காலத்தில் கொண்டிருந்த இப்பகுதி தற்போது தனது பெரும்பாலான இயற்கை செல்வத்தை இழந்து காட்சியளிக்கிற்து. இப்பகுதியில் மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு மூலிகைத்தாவரங்கள் அதிகம் வளர்கின்றன.
இவற்றில் ரய்கமி அல்லது தாமி, கஸ்வா, சிர்யய்தா போன்றவை முக்கியமானவையாகும். தற்போது இந்த தாவரங்கள் அருகி வரும் வகைகளாக குறிப்பிடப்படுகின்றன.
இப்பகுதியில் கடந்த சில வருடங்களாக பரந்த அளவில் காட்டுப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் கருதப்படுகிறது. பன்ஸ்லோய், தோராய் மற்றும் பிராம்மிணி ஆகிய மூன்று முக்கிய ஆறுகள் இப்பகுதியில் பாய்கின்றன. பன்ஸ்லோய், தோராய் ஆறுகள் இம்மாவட்டத்தின் மையப்பகுதியிலும் பிராம்மணி ஆறு தென்பகுதியிலும் ஓடுகின்றன.
பாகுர் வரலாற்றுப்பின்னணி!
இந்தப்பிரதேசத்தின் புராதன காலத்துக்கு முந்தைய வரலாற்றுப்பின்னணி குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. பாகுர் ராஜ் மற்றும் மஹேஷ்பூர் ராஜ் எனும் இரண்டு ஜமீன் சமஸ்தானங்கள் மட்டுமே இப்பகுதியில் இருந்திருக்கின்றன.
முகலாய சாம்ராஜ்யத்திற்கு கீழ் இயங்கி வந்த இந்த ஜமீன்களும் பஹாரியா பிரதேசத்தின் ஆட்சி மற்றும் மக்கள் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்தன. பிளாஸி போரில் வெற்றி பெற்ற பிறகு ஆங்கிலேயர்கள் மேற்கு வங்காளத்தின் பீர்பூம் மாவட்டத்தின் கீழ் இப்பகுதியை கொண்டுவந்தனர்.
இந்த பகுதியை ஆண்டு வந்த பஹாரியா வம்சத்தினரை வெல்லும் முயற்சி கேப்டன் பொரோனி எனும் ஆங்கில அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு தனி அங்கமாக அதே சமயம் ராஜ்மஹால் மலைப்பகுதியின் நீட்சியாக இந்த பாகூர் பிரதேசம் ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்திருக்கிறது.
இப்பகுதியில் சிது, கன்ஹு சந்த் மற்றும் பைரவ் போன்ற சந்தால் வம்ச சுதந்திர போராட்ட வீரர்களும் தோன்றியிருக்கின்றனர். இவர்களுக்கான நினைவுச்சின்னங்களையும் சந்தால் பர்கானா மாவட்டத்தில் பார்க்கலாம்.
பாகுர் பகுதியில் உள்ள சுற்றுலா அம்சங்கள்
ஆன்மிக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சாகச பொழுதுபோக்கு ஸ்தலங்கள் என்று சில முக்கியமான சுற்றுலா அம்சங்களை இந்த பாகுர் நகரம் பெற்றிருக்கிறது.
இவற்றில் சித்து கன்ஹா பார்க் மற்றும் நித்யகாளி மந்திர் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். தர்னி பஹார், வென்னீர் ஊற்று போன்றவையும் பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய சிறப்பம்சங்களாகும்.
பாகுர் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற காலம்
குளிர்காலம் பாகுர் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் இனிமையான குளுமையான சூழல் நிலவுகிறது. குளிர் தாங்கும் உடைகளுடன் பயணம் மேற்கொள்வதும் சிறந்தது.
பாகுர் நகரத்திற்கு எப்படி செல்லலாம்?
ஜார்கண்ட் மாநில தலைநகரமான ராஞ்சி வழியாக இந்த பாகுர் நகரத்திற்கு வரலாம். அங்கிருந்து டாக்சிகள் மற்றும் பேருந்துகள் மூலம் பாகுருக்கு வரலாம். பாகுர் நகரத்தில் ரயில் நிலையம் ஒன்றும் உள்ளது. ரயில் மார்க்கமே இந்த நகரத்திற்கு விஜயம் செய்வதற்கான சிறந்த போக்குவரத்து வசதியாக கருதப்படுகிறது.