தோணி அருவியில் சுற்றுலாப் பயணிகளின் காலடி அதிக அளவில படவில்லை என்றாலும், பசுமையான அடர் வனங்களின் மத்தியில் காட்சியளிக்கும் அருவியின் கவின் தோற்றம் காண்போரை சொக்கவைத்து விடும்.
அதோடு இயற்கையின் அற்புதப் படைப்பை அருகில் காணும் அலாதியான அனுபவத்தை அடைய விரும்புவர்கள் தோணி அருவியை கண்டிப்பாக வந்து பார்க்க வேண்டும்.
இந்த அருவி பாலக்காடு நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோணி எனும் சிறிய மலைப்பாங்கான குக்கிராமத்தில் அமைந்திருக்கிறது.
தோணி அருவியை நோக்கிச் செல்லும் காட்டு வழிப்பாதை நடைபயணம் செல்ல விரும்புபவர்களுக்கு மிகப்பொருத்தமானதாக இருக்கும். இந்தக் காடுகளின் உள்ளடங்கிய பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வந்தாலும், அருவிக்கு செல்லும் பாதை மிகவும் பாதுகாப்பானதே.
அப்படி நீங்கள் நடைபயணம் செல்லும் பட்சத்தில் தோணி குன்றின் உச்சியை அடைய எப்படியும் 3 மணி நேரமாவது ஆகும். அதோடு நடைபயணத்தின் போது தேவையான உணவு, தண்ணீர், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம்.
'மேலும் தோணி அருவி செல்லும் வழியில் 1857-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கவரக்குன்னு மாளிகையின் சிதைவுகளை நீங்கள் பார்க்கலாம்.
தோணி அருவியை சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் மழைக் காலங்களுக்கு பிறகு பச்சை பட்டுடுத்தியது போல் காட்சியளிப்பதுடன், ஓடைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து காணப்படும். எனவே இந்த காலங்களில் நீங்கள் தோணி அருவியை சுற்றிப் பார்க்கும் அனுபவம் அற்புதமானதாக இருக்கும்.