காங்க்ரா பள்ளத்தாக்கில் உள்ள இந்த பிரசித்தமான மலைவாசத்தலம் தனது அற்புதமான இயற்கை காட்சிகளுக்காகவும் அமைதிச்சூழலுக்காகவும் புகழ் பெற்றுள்ளது. பைன் மரங்கள் மற்றும் தியடார் எனப்படும் தேவதாரு மரங்கள் நிரம்பி காணப்படும் அடர்ந்த காட்டுப்பகுதியையும், படிகம் போன்ற நீர் ஓடும் ஓடைகளையும் கொண்ட ரம்மியமான மலைப்பிரதேசம் இது.வழக்கமான சந்தடி நிறைந்த பரபரப்பான மலைநகரமாக இல்லாமல் அமைதி நிரம்பிய சூழலைக்கொண்டிருப்பதால் அம்மாதிரியான விடுமுறை சுற்றுலாத்தலங்களை குறிப்பாக தேடுபவர்களுக்கு இது மிகவும் ஏற்ற சுற்றுலாத்தலமாகும்.
கடல் மட்டத்திலிருந்து 1220 மீ உயரத்தில் வீற்றிருக்கும் இந்த மலைவாசத்தலம் கலாரசிகர்களையும் இயற்கை ஆர்வலர்களையும் ஈர்க்கும் வகையில் இயற்கையின் வித்தியாசமான மலையழகு காட்சிகளுடன் வீற்றிருக்கிறது. நீர்வளம் நிரம்பிய பகுதி எனும் பொருளைக்குறிக்கும் ‘புலும்’ எனும் ஹிமாச்சலி வார்த்தையிலிருந்து இந்த ‘பாலம்பூர்’ எனும் பெயர் உருவாகியுள்ளது.
19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தேயிலை பயிரிடுவதற்கான இடங்களை தேடியபோது இந்த மலைஸ்தலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பாலம்பூர் பகுதி ஹிமாச்சல் மாநிலத்தின் மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதி மையமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
சிறிய நகரமைப்புகள், அடுக்கு அடுக்குகளாக காட்சியளிக்கும் வயல்வெளிகள், கோயில்கள், கிராமங்கள், காலனிய காலத்திய மாளிகைகள் மற்றும் பனி மூடிய தௌலாதார் மலைச்சிகரங்கள் போன்றவை இம்மலைஸ்தலத்தை ஒரு சுற்றுலாச்சொர்க்கமாக மாற்றியுள்ளன.
இப்பகுதியின் வெப்பநிலை எப்போதும் மிதமானதாகவே காட்சியளிப்பதால் வருடமுழுவதும் எக்காலத்தில் வேண்டுமானாலும் பாலம்பூருக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம். கோடைக்காலத்தில் 15° C முதல் 29° C வரையான வெப்பநிலை இப்பகுதியில் நிலவுகிறது.
இது சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்ற இனிமையான சூழலை அளிக்கிறது. மழைக்காலத்தில் பாலம்பூர் பகுதி கடும் மழைப்பொழிவை பெறுவதால் பயணிகள் அதற்கான முன்தயாரிப்புகளுடன் செல்வது சிறந்தது.
நவம்பர் மாதம் முதல் இங்கு குளிர்காலம் துவங்குகிறது. இக்காலத்தில் வெப்பநிலை -2° C வரைவெப்பநிலை சரியக்கூடும் என்பதும் கடும் பனிப்பொழிவு காணப்படும் என்பதும் முக்கியமான தகவலாகும்.
தரம்ஷாலா – காங்க்ரா விமானநிலையமான கக்கால் விமானநிலையம் பாலம்பூருக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து நேரடி விமான சேவைகள் உள்ளன.
ரயில் மூலமாக பாலம்பூருக்கு விஜயம் செய்ய விரும்பும் பயணிகள் மீட்டர் பாதை ரயில் நிலையமான மரண்டா வரை ரயிலில் செல்லலாம். பாலம்பூரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் பதான்கோட் நகரத்தில் அகலப்பாதை ரயில் நிலையமும் உள்ளது.
சாலை மார்க்கமாக சென்றடையவதற்கும் ஏற்ற வசதிகளை பாலம்பூர் சுற்றுலாத்தலம் கொண்டுள்ளது. மண்டி, பதான்கோட் மற்றும் தரம்ஷாலாவிலிருந்து பாலம்பூருக்கு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.