பாலம்பூர் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த சோபா சிங் ஆர்ட் கேலரி இடம் பெற்றுள்ளது. இங்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சர் சோபா சிங் எனும் பிரபல தற்கால ஓவியரின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பாலம்பூரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் இந்த ஆர்ட் கேலரி அமைந்துள்ளது.
சர் சோபா சிங் குறிப்பாக சீக்கிய குருக்களை மையப்படுத்திய ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளார். 1969 ம் ஆண்டில் குருநானக்கின் 500வது ஜயந்தி தினத்தை முன்னிட்டு இவரால் வரையப்பட்ட குரு நானக் உருவ ஓவியம்தான் பெரும்பாலான சீக்கிய மக்களால் குருநானக்கின் உருவமாக வணங்கப்பட்டு வருகிறது.
கட்டி எனும் பூர்வகுடியினரால் வரையப்பட்ட, தௌலாதார் மலைகளை பின்னணியாக கொண்டிருக்கும் ஓவியங்களையும் இந்த காட்சிக்கூடத்தில் பார்க்கலாம்.
1940ம் ஆண்டு வரையப்பட்ட சோஹ்னி-மஹிவல் ஓவியம் இந்த கலைக்கூடத்தில் முக்கியமாக பார்வையாளர்களால் ரசிக்கப்படுகிறது. இங்குள்ள ஹீர் ரஞ்சாவின் ஓவியமும் கூட ஓவியக்கலை ஆர்வலர்களால் விரும்பப்படுகிறது.
சர் சோபா சிங் அவர்களால் வரையப்பட்ட ஷாஹித் பகத் சிங் ஓவியம், மஹாத்மா காந்தி மற்றும் லால்பஹதூர் ஓவியம் ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்களும் இந்த ஓவியக்கூடத்தில் குறிப்பிடத்தக்கவையாக பிரசித்தி பெற்றுள்ளன