ரெய்ஸ் மகோஸ் கோட்டை 1551-ஆம் ஆண்டு, மாண்டோவி நதியின் கரையிலே சுல்தான் அதில் ஷா மன்னரால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை போர்துகீசியர்களின் காலத்தில் முக்கியமான சோதனை சாவடியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்று இது பாதிக்கு மேல் சிதைந்து போனாலும், இதன் மேன்மையான தோற்றம் மற்றும் சரித்திர முக்கியத்துவம் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
வரலாற்று முக்கியத்துவம்
ரெய்ஸ் மகோஸ் கோட்டையில் போர்த்துகீசியர்களின் பின் சேர்க்கைகளும் உள்ளன. இந்த பின் சேர்க்கைகள் 1760-ஆம் ஆண்டு கோட்டையோடு இணைக்கப்பட்டன. அதன் பிறகே கோட்டையின் காவல் கோபுரங்கள் வல்லமை மிக்கதாகவும், எதிரிகளை கண்காணிக்க ஏதுவாகவும் மாற்றம் கொண்டன.
இன்று இந்த கோபுரங்களின் வழி நீங்கள் மாண்டோவி நதியின் அழகிய தோற்றத்தையும், பனாஜி நகரையும், கடலில் நங்கூரமிட்டு நிற்கும் உல்லாச தோணிகளையும், பயணக் கப்பல்களையும் பார்த்து ரசிக்கலாம்.
ரெய்ஸ் மகோஸ் கோட்டை முழுவதும் செம்பூராங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை குறிப்பாக மராட்டியர்களை தடுத்து நிறுத்தும் பொருட்டே போர்த்துகீசியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் போர்த்துகீசியர்களின் வீழ்ச்சிக்கு பிறகு இந்தக் கோட்டை சிறைச்சாலையாக மாற்றம் கொண்டது.