ஆதியில் விஜயேஷ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்ட இந்த சங்கமேஷ்வரர் கோயில் ஒரு முக்கியமான ஆன்மீகக் கோயிலாக பட்டடக்கல் ஸ்தலத்தில் அறியப்பட்டுள்ளது. இது 733ம் ஆண்டு சாளுக்கிய மன்னரான விஜாயாதித்ய சத்யாஷ்ரேயா’வால் கட்டப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்திலேயே பழமையானதாக மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே மிகப்பழமையான கோயில்களுள் ஒன்றாக விளங்குவதால் இது அவசியம் தரிசிக்க வேண்டிய கோயிலாகும். திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள இந்த கோயிலில் ஒரு உள் நடை, கூடம் மற்றும் கருவறை போன்றவை காணப்படுகின்றன. கோயிலின் வெளிச்சுவற்றில் உக்ரநரசிம்மர் மற்றும் நடராஜர் சிற்பங்கள் காணப்படுகின்றன.இந்த கோயிலின் கூரை அமைப்பு மற்றும் கூடம் போன்றவை விருபாக்ஷர் கோயிலைப்போன்றே அமைக்கப்பட்டுள்ளன. விருபாக்ஷர் கோயில் காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோயிலை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு கோயில்களுமே சதுர வடிவத்தில் அடித்தளத்திலிருந்து சிகரம் எழுப்பப்பட்டுள்ளன. சங்கமேஷ்வரா கோயிலில் உள்ள தேவகோஷ்டம் எனும் மாடங்களில் சிவபெருமான் மற்றும் விஷ்ணுவின் அழகான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. தடுப்புச்சுவர்களில் வெகு உன்னதமான கட்டிடக்கலை அம்சங்களாக மடங்கி தொங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ள சலஸ் மற்றும் கர்ணகூடம் என்றழைக்கப்படும் நுண் அம்சங்கள் காணப்படுகின்றன.