ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் 'உப்பு நகரம்' என்று பிரபலமாக அழைக்கப்படும் பலோடி நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரம் 15-ஆம் நூற்றாண்டிலிருந்து தன்னுடைய வரலாற்றை சுமந்து கொண்டு வந்திருக்கிறது. அந்த காலகட்டங்ககளில் இந்த நகரம் 'பல்வரிதிகா' என்ற பெயரில் அறியப்பட்டு வந்தது.
பலோடி நகரம் 1547-ஆம் ஆண்டு ராவ் மால்டியோ ரத்தோர் என்னும் மார்வார் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் பிறகு 1578-ஆம் ஆண்டு பிக்கானேர் மகாராஜாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பலோடி நகரத்தை 1615-ஆம் ஆண்டு ராவ் சூர் சிங் மகாராஜா கைப்பற்றி ஜோத்பூருடன் இணைத்தார்.
பலோடி நகரம் பிரம்மாண்டமாக பரந்து விரிந்து கிடக்கும் தார் பாலைவனத்தில், தங்க நகரம் ஜெய்சல்மேர் மற்றும் சூரிய நகரம் ஜோத்பூர் இரண்டுக்கும் மத்தியிலே அமைந்துள்ளது.
இந்த இடம் பழங்காலம் தொட்டே வணிகர்கள் வியாபாரம் செய்வதற்காக ஒட்டகங்கள் மீது உப்பு மூடைகளை ஏற்றிச் செல்லும் வழியாக இருந்து வருகிறது. மேலும் ஜோத்பூரின் இரண்டாவது பெரிய நகரமான பலோடி நகரம் பிக்கானேர், நாகாவ்ர், ஜெய்சல்மேர் மற்றும் ஜோத்பூருடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
பலோடி நகரின் கலாச்சாரம்
'ஜூட்டிஸ்' என்று அழைக்கப்படும் நவநாகரிக முறையில் தயாரிக்கப்பட்ட காலணிகள், பலவண்ண வளையல்கள், ஒளிரும் நிறங்களில் பெண்கள் அணியும் ஆடைகள், பாசிமணி மற்றும் வெள்ளி நகைகள் என்று ஒவ்வொன்றும் பலோடி நகரின் கலாச்சாரத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இந்த நகரில் ஹிந்தி மற்றும் ராஜஸ்தானி மொழிகளை பேசும் மக்களே அதிக அளவில் வசிக்கின்றனர். மேலும் இதன் கலாச்சாரத்தை தவிர புகழ்பெற்ற கோட்டைகள், ராயல் ஹவேலிஸ், கடைவீதிகள், தொன்மை வாய்ந்த ஹிந்து மற்றும் ஜைன கோயில்கள் போன்றவைகளும் பலோடி நகரத்துக்கு வரும் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன.
பலோடி நகரில் காணப்படும் புராதான கட்டிடங்கள் ராஜ்புட் கட்டிடக் கலைகளான ஜரோக்கா மற்றும் ஜாலி பாணிகளிலேயே பெரும்பாலும் கட்டப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புகழ்பெற்ற நினைவுச் சின்னமான பலோடி கோட்டை கட்டிடக் கலையின் உச்சம். இதன் நேர்த்தியான வடிவமைப்பை நேரில் கண்டு ரசிப்பதற்காக இந்த கோட்டைக்கு உலகம் முழுவதுமிருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பலோடி வரும் பயணிகள் 1750-ஆம் ஆண்டு சிகப்பு மணற்பாறைகளை கொண்டு கட்டப்பட்ட லால் நிவாஸ் என்ற அற்புதமான கட்டிடத்துக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். இந்த எழில் கொஞ்சும் கட்டிடம் தற்போது முக்கியமான புராதன ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு வரும் பயணிகள் இந்த கட்டிடம் பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் கண்ணாடி சரவிளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் அழகை கண்டு சொக்கிப் போவது நிச்சயம். மேலும் பலோடி வரும் பயணிகள் சச்சியா மாதா கோயில், மகாவீரர் ஆலயம், ராம்தேவ்ரா கோயில், சூரிய பகவான் கோயில் போன்ற இடங்களுக்கும் சென்று வரலாம்.
'இளம் நாரைகளின் கிராமம்' - புலம்பெயர் பறவைகளுக்கான இடம்
பலோடி நகரில் உள்ள கோட்டைகள், புராதன கட்டிடங்கள் மற்றும் தொன்மையான ஆலயங்களை தவிர, பறவை காதலர்களின் கனவு தேசமாகவும் இந்த நகரம் விளங்கி வருகிறது. இந்த நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கீச்சன் கிராமத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகளை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
அதிலும் குறிப்பாக இந்த கிராமத்தில் ஒரு சில காலங்கள் மட்டுமே வசிக்கக் கூடிய 'குர்ஜா' என்று அழைக்கப்படும் இளம் நாரைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இந்த அரிய வகை நாரைகள் தென்மேற்கு ஐரோப்பாவிலிருந்து, உக்ரைன், போலந்து வழியாக கீச்சன் கிராமத்தை அடைந்த பிறகு சிறிது காலங்களே இங்கு வாசம் செய்யும்.
எனவே இந்த வகை நாரைகளை ஆகஸ்டிலிருந்து, மார்ச் வரையிலான காலங்களில்தான் கீச்சன் கிராமத்தில் நீங்கள் பார்க்க முடியும். இதன் பன்னாட்டு அங்கீகாரம் காரணமாக இந்த கிராமம் 'இளம் நாரைகளின் கிராமம்' என்று பிரபலமாக அறியப்படுகிறது.
பலோடியை எப்படி அடைவது
பலோடி நகரிலிருந்து ஜோத்பூர் விமான நிலையம் 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. எனினும் வெளிநாட்டு பயணிகள் அருகாமையில் உள்ள புது டெல்லி விமான நிலையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த விமான நிலையம் மும்பை, பெங்களூர், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பிக்கானேர், ஜெய்சல்மேர், லால்கார், பழைய டெல்லி மற்றும் ஜோத்பூர் பகுதிகளிருந்து ரயில் மூலமாகவும் பலோடி நகரை அடையலாம். மேலும் ரயில் மற்றும் விமான நிலையங்களிலிருந்து வாடகை கார்கள் மற்றும் ஏராளமான பேருந்துகளும் பலோடி நகருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
பலோடி நகரின் கோடை காலங்களில் 45 டிகிரி அளவில் வெப்பம் சுட்டெரித்தால், அதற்கு நேர்மாறாக குளிர் காலத்தில் 5 டிகிரி அளவில் உறையவைக்கும் வெப்பநிலை நிலவும். எனினும் பனிக் காலத்தில் பலோடி நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.