ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பஞ்சவதி எனும் காட்டில் தான் தன் பதினான்கு வருட வனவாசத்தை கழிக்க எண்ணியதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த பஞ்சவதி காடுகள் போலவே செயற்கையாக உருவாக்கப்பட்டதே இந்த பஞ்சவதி காடுகள்.
இந்த செயற்கை காடுகள் பிர்லா அறக்கட்டளையால் அமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான கத்தாளை செடிகள், செழித்து வளர்ந்திருக்கும் மரங்களுக்கும், புதர்களுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் பாங்கு நிஜமான காட்டுக்குள் இருப்பது போன்ற ஒரு பிரம்மையை நமக்குள்ளே ஏற்படுத்திவிடும்.
இந்த காடுகளின் பசுமைக்கு நடுவிலே இராமர், சீதா, ஹனுமான் உள்ளிட்ட இராமாயண கதாப்பாத்திரங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இராமாயண பாராயணம் செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாம் புராண காலத்தில், ராமர் வாழ்ந்த உண்மையான பஞ்சவதி காடுகளில் சஞ்சரிப்பது போன்ற ஒரு உணர்வு நிலைக்கு சென்று விடுவோம். எனவே பிலானி வரும் பயணிகள் கண்டிப்பாக பஞ்சவதி காடுகளை தவற விட்டுவிடக் கூடாது.