ராஜஸ்தான் மாநிலத்தில் தார் பாலைவனத்தில் இந்த பாரம்பரியமிக்க போக்ரான் நகரம் உள்ளது. நான்கு புறமும் ஐந்து பெரிய உப்புப்பாறைகளால் சூழப்பட்டுள்ள இந்த நகரத்தின் பெயருக்கு ‘ஐந்து கானல் நீர் தோற்றங்களின் ஸ்தலம்’ என்பது பொருளாகும். இந்தியா அடுத்தடுத்து இந்த ஸ்தலத்தில் நடத்திய அணுகுண்டு பரிசோதனைகளால் இது அனைவரும் அறிந்த ஒரு பெயராகவும் மாறியுள்ளது. 1974ம் ஆண்டில் மே 18ம் தேதியில் இந்தியா இங்கு ‘புத்தரின் சிரிப்பு’ எனும் பெயரில் தன் முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நகரம் ஹவேலிகள், கோட்டை, கட்டிடச்சின்னங்கள் மற்றும் கோயில்கள் போன்றவற்றுக்கு புகழ் பெற்றுள்ளது. இவற்றில் பாபா ராம்தேவ் கோயில் முக்கியமான ஆன்மீக சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இது பொக்ரான் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள ராம்தேவரா கிராமத்தில் உள்ளது.
இந்த கோயிலின் வளாகத்தில் ராம்தேவ்ஜி எனும் ராஜஸ்தானிய நாட்டுப்புற கடவுளின் சமாதி உள்ளது. ராம்தேவரா திருவிழாவின்போது இந்த ஸ்தலத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.
போக்ரான் நகரின் மற்றொரு முக்கிய சுற்றுலா அம்சம் பாலாகர் என்றழைக்கப்படும் பொக்ரான் கோட்டையாகும். 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இது சம்பாவத் வம்சத்தைச்சேர்ந்த தளபதி ஒருவரால் கட்டப்பட்டுள்ளது.
இதன் உன்னதமான கட்டிடக்கலை அம்சங்களும் வரலாற்றுப் பின்னணியும் பல திசைகளிலிருந்தும் பயணிகளை ஈர்க்கின்றன. இந்த கோட்டை வளாகத்தில் ஒரு மியூசியமும் உள்ளது. இங்கு ராஜபுத்திர வம்சத்தைச்சேர்ந்த ராஜ உடைகள், ஆயுதங்கள் மற்றும் மட்பாண்டங்கள் போன்றவற்றை பயணிகள் பார்க்கலாம்.
ராஜ கம்பீரமான பல அழகிய ஹவேலிகளும் இந்த நகரத்தில் அமைந்துள்ளன. சலீம் சிங் கி ஹவேலி, பட்வோன் ஜி கி ஹவேலி மற்றும் நத்மல்ஜி கி ஹவேலி ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
போக்ரான் நகரத்தை விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். ஜோத்பூர் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவை பொக்ரான் நகருக்கு அருகிலுள்ள விமானத்தளமாகவும் ரயில் நிலையமாகவும் அமைந்துள்ளன.
போக்ரான் நகரத்துக்கு ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிக்கானேர் மற்றும் ஜெய்சல்மேர் போன்ற நகரங்களிலிருந்து பேருந்துச்சேவைகளும் அதிகம் உள்ளன.
வருடமுழுதும் கடுமையான பருவநிலையை போக்ரான் பிரதேசம் பெற்றுள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரையான இடைப்பட்ட காலத்தில் பருவநிலையானது சற்றே இதமான சூழலுடன் காட்சியளிப்பதால் இப்பருவத்தில் போக்ரானுக்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது.