1906ம் ஆண்டில் அந்தமான் செல்லுலர் ஜெயில் கட்டப்படுவதற்கு முன்பு இந்த வைப்பர் தீவு ஒரு முக்கிய சிறைச்சாலைப்பகுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் வடமேற்கே அமைந்துள்ள இந்த தீவுக்கு ஃபெர்ரி மூலமாக சென்றடையலாம். இந்த தீவுக்கு எப்படி இந்த பெயர் ஏற்பட்டது என்பது குறித்து இரண்டு சுவரசியமான கதைகள் சொல்லப்படுகின்றன.
ஒரு கதையின்படி, 1789ம் ஆண்டு இந்த தீவை வந்தடைந்த ஆர்ச்சிபால்ட் பிளேர் பயணம் செய்த கப்பலின் பெயரே இந்த தீவுக்கு இடப்பட்டதாக சொல்லப்படுகிறது. மற்றொரு திகிலூட்டும் கதையின்படி, இந்த தீவில் ‘வைப்பர்’ எனப்படும் கொடிய விஷம் கொண்ட ‘கண்ணாடி விரியன் பாம்புகள்’ நிறைந்திருந்ததால் இப்பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இங்குள்ள வைப்பர் தீவு சிறைச்சாலையில் பல முக்கியமான இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இறுதி நாட்களை கழித்தனர் எனும் வரலாற்று தகவல், நெஞ்சை நெகிழச்செய்யும் கசப்பான ஒரு விஷயமாகும்.
ஆங்கிலேய ஆட்சியை அகற்ற போராடியதற்காக பல ராஜவம்சங்களை சேர்ந்த அரசர்களும், சாதாரணமானவர்களுடன் சேர்த்து இந்த தீவில் சிறையிடப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதற்கு தெளிவான வரலாற்றுக்குறிப்புகள் சான்றுகளாக உள்ளன. பூரி ஜகன்னாத ராஜ வம்சத்தை சேர்ந்த ராஜா பிரிஜ் கிஷோர் சிங்க் தேவ் என்பவர் இங்கு சிறைவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி இறந்ததாக வரலாறு கூறுகிறது.
அதுபோன்ற வரலாற்று கொடுமைகளின் எச்சமாக மிச்சமிருக்கும் சிறைச்சாலையின் சிதிலங்களை இன்றும் நாம் வைப்பர் தீவில் காணலாம். இந்த சிறைச்சாலையை பார்க்கும்போது நம்மையும் அறியாமல் காலனிய வரலாற்றின் கசப்பு நம்மில் பரவுவதை உணரலாம்.
வரலாற்று சின்னங்கள் தவிர வைப்பர் தீவானது பார்த்து ரசிப்பதற்கேற்ற இயற்கை எழிலுடனும் காட்சியளிக்கிறது. அந்தமான் சுற்றுலாவின் போது ஒரு பிக்னிக் சிற்றுலாப்பயணம் போன்று பயணிகள் விஜயம் செய்ய இந்த வைப்பர் தீவு மிகவும் ஏற்றதாகும்.
பீனிக்ஸ் பே ஜெட்டி துறைமுகத்திலிருந்து படகு மூலமாக இந்த தீவினை 20 நிமிடங்களிலேயே சென்றடையலாம். சில படகு சேவை நிறுவனங்கள் தீவை சுற்றியுள்ள எழிற்பகுதிகளையும், சிறைச்சாலையின் வெளிப்புறங்களையும் படகிலிருந்தபடி சுற்றிக்காட்டும் ஒருங்கிணைந்த சேவைகளையும் வழங்குகின்றன.