தமிழ் நாட்டின் சோழ மண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகாட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் அமைவிடமாக இருந்த பழவேற்காடு என்ற இந்த சிறு நகரம் அதிர்வுகள் மற்றும் மாறுபாடுகள் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது.
டச்சுக்காரர்களால் பெருமளவில் ஆளப்பட்ட இந்த நகரத்தின் வரலாறு அவர்களோடு மட்டும் நின்று விடவில்லை; போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் கூட பல்வேறு காலகட்டங்களில் தங்களுடைய வலிமையான எல்லைகளை இந்நகரத்தை சுற்றி அமைத்துக் கொண்டு இதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பங்களித்தருக்கின்றனர்.
கடல் துறைமுகமாகவும், வர்த்தக மையமாகவும் இருக்கும் இந்த இடம், முந்தைய நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டின் வியாபாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளது என்றால் அது மிகையாகாது.
சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பழவேற்காடு இரு விஷயங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது. அவை பழவேற்காடு ஏரி மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவையாகும்.
பழவேற்காட்டிலுள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர்நிலை ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது.
இந்த நீர்நிலையின் தண்ணீர் நன்னீரை விட அதிகமான உப்புத் தன்மையுடன் இருந்தாலும், இது கடல் நீர் கிடையாது. இந்த புவியியலமைப்பில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயம் பறவைகள் சீசனில் பல்வேறு இடம் பெயரும் பறவைகளுக்கு அடைக்கலம் தந்து வருகிறது.
இந்த ஏரிக்கு வரும் பல்வேறு வகையான பறவைகளின் காரணமாக, பறவைகளை கவனிப்பது இங்கு வருபவர்களின் விருப்பமான பொழுதுபோக்காக உள்ளது.
பழவேற்காட்டில் டச்சு சர்ச், டச்சு கல்லறை, கலங்கரை விலக்கம், சிந்தாமணீஸ்வரர் கோவில் மற்றும் பெரிய பள்ளிவாசல் ஆகிய எண்ணற்ற கண்கவரும் சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
இங்கிருக்கும் கட்டிடங்கள் மற்றும் வடிவமைப்புகளான தேவாலயங்கள், பழமையான கட்டிடங்கள் மற்றும் கல்லறைகள் டச்சுக் கலையின் தாக்கத்திற்குட்பட்டு, டச்சு நாட்டுப் பாணியிலேயே இருப்பதை இன்றும் காணலாம்.
சென்னை நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பழவேற்காட்டை சாலை வழியாக எளிதில் அடைய முடியும். மிதவெப்ப மண்டல பருவநிலையை எதிர் கொண்டுள்ள பழவேற்காட்டிற்கு வருடம் முழுவதும் செல்ல முடியுமென்றாலும், சுட்டெறிக்கும் கோடைகாலங்களிலும் மற்றும் அதீதமான மழைப்பொழிவு காலநிலைகளிலும் வராமலிருப்பது நன்று.
இயற்கையான அழகு, மனம் மயக்கும் பறவையினங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் வளமையான கலாச்சார வரலாறு ஆகியவற்றால் சுற்றுலாப் பயணிகளுக்கும் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் விருப்பமான இடமாக பழவேற்காடு விளங்குகிறது.