பூரி பேருந்து நிலையத்துக்கு வெகு அருகாமையில், கண்டிச்சா சதுக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கண்டிச்சா கோயில் ரத யாத்திரைத் திருவிழாவுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். இக்கோயில், கண்டிச்சா கர் அல்லது கண்டிச்சா மந்திர் என்றும் அறியப்படுகிறது.
ஸ்ரீ கண்டிச்சா கோயில், ஜகன்னாதர் கோயிலுக்கு அடுத்ததாக, பூரி ஜகன்னாதரின் இரண்டாவது பிரதான உறைவிடமாகத் திகழ்கிறது. ரத யாத்திரை நடக்கும் காலம் தவிர்த்து, இக்கோயில் பெரும்பாலும் ஆளரவமின்றியே காணப்படுகிறது.
எனினும், இக்கோயில், ஜகன்னாதர் கோயில் நிர்வாகத்தால் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் கலிங்கா காலத்தைய கட்டுமான பாணியின் அசல் வார்ப்பாகத் திகழ்கிறது.
சுமார் 75 அடி உயரமும், 430 அடி நீளமும் கொண்டு, ஒரு அழகிய தோட்டத்துக்கு மத்தியில் மெல்லிய சாம்பல் நிற மணற்பாறையினால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஒரு சுற்றுச்சுவரினால் சூழப்பட்டுள்ளது.
திருவிழாவின் போது, ஜகன்னாதர் கோயிலிலிருந்து சிலைகள் ஸ்ரீ கண்டிச்சா கோயிலுக்கு கொண்டு வரப்படும்போது, அவை ‘ரத்னவேடி’ என்றழைக்கப்படும் சிம்மாசனத்தில் அமர்த்தி வைக்கப்படுகின்றன. இந்த சிலைகள் மேற்குப்புற நுழைவு வாயில் வழியாக நுழைந்து, கிழக்குப்புற நுழைவுவாயில் வழியாக வெளியேறுகின்றன.