இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பீமரின் பெயரைத் தாங்கியுள்ள பிம்பெட்கா இந்தியாவிலேயே மிகவும் பழமையான குகைகளில் ஒன்றாகும். இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இடமாகும்.
பிம்பெட்கா குகைகள் மற்றும் பாறை வாழிடங்கள், மத்தியப் பிரதேசத்தின் ரெய்சென் மாவட்டத்தில் உள்ளன. இவை விந்திய மலைத்தொடர்களால் சூழப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது.
இங்கிருக்கும் 600-க்கும் மேற்பட்ட குகைளில் பழங்கால மனிதர்களின் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகள் பல்வேறு ஓவியங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மனிதர்களின் ஓவியங்கள் மட்டுமல்லாமல், புலி, நாய், பல்லி, யானைகள், எருதுகள் மற்றும் பல விலங்கினங்களின் ஓவியங்களும் இந்த குகைகளில் வரையப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்கள் வரைவதற்கு இயற்கையான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காய்கறிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வர்ணங்கள், இந்த குகைகளின் உட்புற சுவர்களில் காணப்படுகின்றன.
ஆரம்ப காலத்தில் இவை பௌத்த மத தலங்களாகவே கருதப்பட்டு வந்தன. V.S.வாகான்கார் என்ற இந்திய தொல்லியல் ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இந்த குகை மற்றும் பாறை வாழிடங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களைச் சேர்ந்தவை என கண்டறியப்பட்டன.
இந்த ஓவியங்களை வரைய பயன்படுத்தப் பட்டுள்ள பாணி, பழைய கற்காலத்திலிருந்து மத்திய காலம் வரையிலும் நீண்டிருக்கிறது.
பல்வேறு வரலாற்று காலகட்டங்களுக்கு நம்மை பயணிக்க வைக்கும் தன்மையுடைய பிம்பெட்கா குகைகள் இருப்பதால், அவை இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் தேசிய பொக்கிஷங்களாக உள்ளன.