சர் ஆர்தர் காட்டன் மியூசியம் எனும் இந்த அருங்காட்சியகம் சர் ஆர்தர் காட்டன் எனும் ஆங்கிலேய பொறியாளரின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது. இவர் காலனிய ஆட்சியின்போது கோதாவரி ஆற்றின் குறுக்கே பல நீர்ப்பாசன கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளார்.
குறிப்பாக தௌலேஸ்வரம் நீர்த்தேக்கம் எனும் கட்டுமானத்தை உருவாக்கிய பெருமை இவருக்குரியதாகும். இவரது பணிக்காலத்தின்போது இந்தியாவில் எழுப்பப்பட்ட கட்டுமான அமைப்புகளில் பல புதுமையான தொழில்நுட்ப அமைப்புகளை அறிமுகப்படுத்தியவராக இவர் புகழுடன் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அணைக்கட்டு தொழில்நுட்பத்தின் மூலம் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. டெல்டா ஆர்க்கிடெக்ட் என்று சிறப்புப்பெயருடன் அறியப்பட்ட இவர் அக்காலத்தில் அடக்க முடியாத ஆறாக கருதப்பட்ட கோதாவரியை ஒரு அமைதியான நீராதார சக்தியாக மாற்றிக்காட்டினார்.
இவரது பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சர் ஆர்தர் காட்டன் மியூசியம் சீமாந்திரா மாநிலத்தில் கட்டுமானத்துறைக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரே அருங்காட்சியகமாக வீற்றிருக்கிறது.
இங்கு சர் ஆர்தர் காட்டன் அவர்களின் பல அரிய புகைப்படங்கள் மற்றும் அணைக்கட்டுமான புகைப்படங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அணைக்கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.