துவாரஹாத் எனும் இந்த புராதனமான ஸ்தலம் தனது வரலாற்று மற்றும் தொல்லியல் பின்னணிக்காக பிரசித்தமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. ராணிக்கேத் நகரிலிருந்து 35 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த ஸ்தலத்தில் 55 புராதன கோயில்கள் அமைந்துள்ளன.
ஷக்தி கோயில், நைத்னா தேவி கோயில், பத்ரிநாத கோயில், மணியன் கோயில், மிருத்யுஞ்சயா கோயில் மற்றும் த்வஜ் கோயில் போன்றவை இங்குள்ள கோயில்களில் குறிப்பிடத்தக்கவையாகும். உள்ளூர் நம்பிக்கைகளின்படி சஞ்சிவனி எனும் தெய்வீக மூலிகை இங்குள்ள ஷக்தி கோயில் வளாகத்தில் வளர்வதாக சொல்லப்படுகிறது.
ராம்கங்கா ஆற்றை ஒட்டிய ரம்மியமான பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருக்கும் இந்த துவாரஹாத் ஸ்தலம் அற்புதமான இயற்கை எழிற்காட்சிகளை பயணிகளுக்கு வழங்குகிறது.
வரலாற்றுக்காலத்தில் இது கத்யூரி ராஜ வம்சத்தின் தலைநகராக விளங்கியிருக்கிறது. 16ம் நூற்றாண்டில் கத்யூரி வம்சத்தின் முக்கியமான கேந்திரமாக இது திகழ்ந்திருப்பது தெரிய வருகிறது.
வருடாவருடம் சியால்டே-பிக்கௌதி எனும் திருவிழாவும் இந்த ஊரில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மகர் சங்கராந்தி, பசந்த பஞ்சமி, ஓல்கியா, கதருவா, பத் சாவித்ரி மற்றும் கங்கா துஸேரா போன்ற பண்டிகைகளும் இப்பகுதியில் விமரிசையாக அனுஷ்டிக்கப்படுகின்றன.