ரெடியின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்கி வருவது ரெடி கணபதி ஆலயமே ஆகும். இந்த கணபதி கோயிலின் கதை விந்தையானது மட்டுமல்ல, நம்மை திகைப்படைய செய்வதும் கூட.
ரெடி கிராமம் வழியாக 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி அன்று தன்னுடைய சுமையுந்தில் சென்றுகொண்டிருந்த சதானந் நாகேஷ் கம்பாலி என்ற ஓட்டுனர் ஓய்வு எடுப்பதற்காக ரெடியில் வண்டியை நிறுத்திவிட்டு அதனுள்ளே உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறார்.
அப்போது அவர் கனவில் தெய்வ வடிவாய் தோன்றிய கணபதி பெருமான், ரெடியின் ஒவ்வொரு பகுதியையும் தோண்டிப் பார்த்து தன் சிலையை கண்டேடுக்குமாறு கூறியிருக்கிறார்.
அந்த கனவை பூரணமாக நம்பிய தீவிர கணபதி பக்தரான சதானந் கம்பாலி, ரெடியை சேர்ந்த பனி ஆட்களை வைத்துக்கொண்டு தோண்டிப் பார்த்ததில், கடற்கரை ஓரமாக ஒரு விநாயகர் சிலை கிடைத்திருக்கிறது.
அதுவே தற்போதுள்ள ரெடி கணபதி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணபதி சிலை. இந்த சிலை 6 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டது.
அதன் பிறகு தொல் பொருள் ஆராய்சியாளர்கள் செய்த ஆய்வில் இந்த விநாயகர் சிலை பாண்டிய மன்னர்கள் காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சில நாட்களில் விநாயகரின் வாகனமான மூஞ்சூறும் ரெடி கணபதி கோயிலின் அருகாமை பகுதிகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும், சங்கடஹர சதுர்த்திக்கும் ஏராளமான பக்தர்கள் ரெடி கணபதி கோயிலுக்கு வருவர்.