அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்திலுள்ள ரோயிங்கின் பிரபலமான சுற்றுலாத்தலங்களுள் ஒன்றான இஃபிபானி, ஈடு இணையற்ற அழகியலோடு காணப்படுகிறது.
இது ரோயிங் நகராட்சியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திபாங் ஆற்றின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இது, சுற்றுலாப் பயணிகளுக்கு இனிய பொழுதுபோக்கை வழங்கக்கூடியதாகவும் திகழ்கிறது.
மனதை மயக்கக்கூடிய காட்சிகளைக் கொண்ட பள்ளத்தாக்கு மற்றும் ஆறு ஆகியவை இந்தியாவெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை இங்கு வரவழைக்கக்கூடியதாக விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகள் சாப்பாட்டு பொட்டலம் கொண்டு வந்தோ அல்லது ஆற்றின் கரையிலேயே சமைத்தோ உண்டு மகிழலாம்.
இயற்கை விரும்பிகள் கூடும் இடங்களுள் ஒன்றான இங்கு, இயற்கையின் இசையை ரசிப்பதோடல்லாமல் மக்கள் அசலான இசையையும் கேட்டு ரசிக்கலாம். அமைதியான இந்த இடத்தில் சலசலத்து ஓடும் ஆறு, ஒருவரை நகரின் பரபரப்புகளை மறக்கச் செய்து வேறொரு உலகத்திற்கே கூட்டிச் சென்று விடும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரியும் பசுமை சூழ அமைந்திருப்பதினாலேயே இஃபிபானியில் குளிர்ச்சியான, புத்துணர்வூட்டும் தென்றல் எப்போதும் வீசுகிறது. இங்கு பொழுதுபோக்க வரும் சுற்றுலாப் பயணிகள் சில விளையாட்டு சாதனங்களை எடுத்து வந்து தங்கள் நாளை இனிமையாகக் கழிக்கலாம்.
தூண்டிலிட்டு மீன் பிடிப்பது இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை சுவாரஸ்யப்படுத்துகிறது. புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டோர் இங்கு வந்தால் மிகச் சிறப்பான சில புகைப்படங்களை அவர்தம் காமிராவில் சிறைப்பிடித்துச் செல்லலாம்.