ருக்காலா எனும் இந்த இடம் கோட்காயி பகுதியின் மையத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாஸ்தலமாக வீற்றிருக்கிறது. தன் ரம்மியமான இயற்கை அழகு மற்றும் சுவையான ஆப்பிள் பழங்கள், உள்ளூர் மக்களின் உபசார கலாச்சாரம் போன்றவற்றுக்கு இந்த இடம் பிரசித்தி பெற்றுள்ளது. கலாச்சாரப்பாரம்பரிய கிராமங்களாக மாற்றப்பட்டிருக்கும் இந்தப்பகுதியின் கிராமங்கள் மற்றொரு விசேஷ அம்சமாகும்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களின்போது இங்குள்ள ஆப்பிள் மற்றும் பிளம் தோப்புகளில் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் பழங்கள் பழுத்து தொங்குவது கண்கொள்ளாக்காட்சியாகும்.
ஆங்காங்கு பண்ணைவீடுகளை மட்டுமே கொண்ட கரடுமுரடான நிலப்பரப்பில் வண்ணச்சிதறல்களை வீசியபடி ஜொலிக்கும் இந்த பழத்தோப்புகளின் அழகு இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாத அற்புதம் என்பதில் சந்தேகமேயில்லை.
ராயல், கோல்டன் மற்றும் கிரான்னி ஸ்மித் ஆப்பிள் பழவகைகளின் விளைச்சல் மற்றும் ஏற்றுமதிக்கு இந்த ருக்காலா பகுதி புகழ் பெற்று விளங்குகிறது.
செழிப்பான பழத்தோப்புகள் மட்டுமல்லாது வேறு சில சுவாரசியமான சுற்றுலா அம்சங்களையும் ருக்காலா கொண்டுள்ளது. கியாரி கோயில் மற்றும் தேவ்ரி கோயில் ஆகிய இரண்டு ஆன்மிக திருத்தலங்களும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
பசுமைச்செழிப்புடன் கூடிய வனப்பகுதியின் வழியே செல்லும் மலையேற்றப்பாதையில் கிராமப்புற வசிப்பிடங்களை கடந்து இந்த கோயில்களை சென்றடையலாம். சக்திக்கடவுளான துர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள கியாரி கோயில் 300 வருடங்கள் பழமையுடையதாக சொல்லப்படுகிறது.
ருக்காலாவிலிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள சம்பி-குப்பர் எனும் இடத்துக்கு சிறு சிற்றுலாப்பயணத்தை பயணிகள் மேற்கொள்ளலாம்.
ருக்காலா நகரமானது விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையும்படி அமைந்துள்ளது. இப்பகுதியில் கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவை முக்கிய பருவங்களாக உள்ளன.
மே மாதம் துவங்கி ஜூலை வரை நீடிக்கும் கோடைக்காலம் இப்பகுதியில் சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. தவிர இனிமையான சூழல் நிலவுவதால் குளிர்காலத்திலும் இப்பகுதிக்கு விஜயம் செய்யலாம்.