சபரிமலை எனும் ஆன்மீக மலைப்பிரதேசம் இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்காகவே பிரசித்தமாக அறியப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் சாரி சாரியாக அணிவகுத்து வருகை தந்து ஒரு பெரும் மக்கள் திரளாக குவிந்து இந்த ஐயப்பன் கோயிலை தரிசிக்கின்றனர்.
கவலைகளை நீக்கி, மன நிறைவையும், சாந்தியையும் அளித்து பக்தர்களின் வேண்டுதல்கள் யாவையும் இந்த ஐயப்ப பஹவான் நிறைவேற்றுவதாக ஐதீக நம்பிக்கை நிலவி வருகிறது.
ஆரம்ப காலத்தில் வெகு சில தீவிர பக்தர்களால் மட்டுமே விஜயம் செய்யப்பட்ட, வெகு சிரமமான யாத்திரை ஸ்தலமாக கருதப்பட்ட இந்த ஐயப்பன் மலைக்கோயில் இன்று இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கிறது.
நவம்பர் மாதத்தில் துவங்கும் இந்த கோயிலுக்கான ஆன்மீக யாத்திரைக்காலம் ஜனவரியுடன் முடிவடைகிறது. இந்த மலைப்பிரதேசம் முழுவதும் எதிரொலிக்கும் ‘ஸ்வாமியே ஐயப்பா’ எனும் கோஷத்தோடு இக்காலத்தில் மண்டலபூஜை நடத்தப்படுகிறது.
ஐயப்பன் கோயிலின் மூலஸ்தானத்தை அடைய பக்தர்கள் இந்தக்கோயிலின் பிரதான அம்சமான 18 புனிதப்படிகளில் ஏறி மேலே செல்கின்றனர். இந்த பதினெட்டு படிகளும் மனிதர்களின் 18 முக்கிய குணவிசேஷங்களை குறிப்பிடுவதாக ஐதீகம்.
முதல் 5 படிகள் மனித உடலின் ஐந்து உணர் சக்திகளையும் (பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், ஸ்பரிசம்), அடுத்த 8 படிகள் மனிதனின் 8 மன உணர்ச்சிகளையும் (அன்பு, கோபம், பேராசை, காமம், பெருமை, போட்டி, பொறாமை மற்றும் கர்வம்), அடுத்த மூன்று படிகள் மனிதனின் மூன்று மனோநிலைகளையும் (ஞானம், உல்லாசம் மற்றும் மந்தம்), கடைசி இரண்டு படிகள் கல்வி மற்றும் கல்லாமையை குறிப்பதாகவும் ஐதீகமாக நம்பப்படுகின்றன.
ஐயப்பன் கோயிலுக்கு அருகிலேயே அதன் இடது புறத்தில் மாளிகைபுரம் தேவி கோயில் எனும் அம்மன் கோயிலும் அமைந்துள்ளது. ஐயப்பன் கோயில் மீதிருந்து காணக்கிடைக்கும் பிரம்மாண்ட மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் எழிற்தோற்ற தரிசனம் மனதை நிர்மலமாக்கும் சக்தி கொண்டது என்பதை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும். வார்த்தைகளுக்குள்ளும் நம்பிக்கைகளுக்குள்ளும் அடங்காத ஒரு அமானுஷ்ய சூழல் இது.