மாளிகைபுரம் தேவி கோயில் எனப்படும் இந்த அம்மன் கோயில் ஐயப்பன் கோயிலில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஒரு சிறு குன்றில் வீற்றுள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு வலப்புறத்திலுள்ள இந்த கோயிலுக்கு செல்லும்போதே சாரல் நிரம்பிய மலைக்காற்றும் இனிமையான சூழலும் நம்மை தழுவுகின்றன.
ஐயப்பன் மற்றும் மாளிகைபுரத்து அம்மன் ஆகிய இரண்டு கடவுள்கள் சம்பந்தப்பட்ட பல புராணக்கதைகள் இந்த கோயிலில் பின்னணியில் சொல்லப்படுகின்றன. அதாவது ஐயப்ப கடவுள் மகிஷி எனும் அசுரகணத்தை வதம் செய்து கொன்றபோது அதன் உடற்பாகங்களிலிருந்து ஒரு அழகிய கன்னி வெளிப்பட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனை வேண்டியதாகவும், பிரமச்சரிய நோக்குடன் அவதாரம் எடுத்திருந்த ஐயப்பன் அதற்கு மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர் அந்த பெண் அவதாரம் ஐயப்பனின் அருகிலேயே இருக்க வேண்டி மாளிகை புரத்து அம்மனாக ஐயப்பன் கோயிலுக்கு அருகிலேயே குடிகொண்டுவிட்டதாக ஐதீகக்கதை முடிகிறது. பகவதி சேவை எனும் பிரசித்தமான சடங்கு இக்கோயிலில் செய்விக்கப்படுகிறது.
கண் மை, பட்டுப்பாவாடை, குங்குமம், வளையல் போன்றவை இந்த சடங்கின்போது பக்தர்களால் காணிக்கையாக மாளிகைப்புரத்து அம்மனுக்கு அளிக்கப்படுகிறது. நாகதேவதைகளுக்கான சிறிய சன்னதிகளையும் இந்த கோயில் வளாகத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம். தேங்காய் உருட்டு எனும் தனித்தன்மையான சடங்கும் பக்தர்களால் மாளிகைபுரத்து அம்மன் கோயிலில் செய்விக்கப்படுகிறது.