சக்லேஷ்பூருக்கு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை 48ல் இந்த மஞ்சராபாத் கோட்டை அமைந்துள்ளது. இஸ்லாமிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வண்ணம் இது அலங்கார வளைவுடன் வாயில் அமைப்புகளைக்கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,240 அடி உயரத்தில் இந்த கோட்டை அமைந்துள்ளது.
இது மைசூரை ஆண்ட திப்பு சுல்தானால் பாதுகாப்பு தேவைகளுக்காக கட்டப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியிலிருந்து சக்லேஷ்பூரை தாண்டி தக்காணத்திற்குள் வரும் பாதைகளை கண்காணிக்கும்படியாக இது அமைந்துள்ளது.
திப்பு சுல்தான் ஆட்சியின்போது யுத்த தளவாடங்கள் குவிக்கப்பட்டிருந்த இந்த கோட்டை ஆங்கிலேயப்படை மங்களூரிலிருந்து ஊடுறுவதை தடுக்கும் வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு மலையின்மீது அமைந்துள்ள மஞ்சராபாத் கோட்டை ஒரே ஒரு தளத்தை மட்டுமே கொண்டுள்ளது. இது வழக்கமாக பல தளங்களை கொண்டு அமைந்திருக்கும் மற்ற கோட்டைகளோடு ஒப்பிடும்போது வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைகளை நன்றாக தரிசிக்கும்படி அமைந்துள்ள இந்த கோட்டையில் கூட்டல்குறி வடிவில் அமைக்கப்பட்டுள்ள குழிகள் காணப்படுகின்றன. இது கோட்டைக்கான நீராதாரமாக திகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
ஒரு நட்சத்திர வடிவில் அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை 1785ம் ஆண்டு கட்டத்துவங்கப்பட்டு 1792ம் ஆண்டு முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கோட்டையில் பல அறைகள் அல்லது கூடங்கள் காணப்படுகின்றன. குதிரைகளை கட்டுவதற்கு, சமைப்பதற்கு, வீரர்கள் குளிப்பதற்கு என்று இவை பயன்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.
ஸ்ரீரங்கப்பட்டணா வரை செல்லக்கூடிய ஒரு சுரங்கப்பாதையையும் இங்கு பார்க்க முடிகிறது. இது பின்னர் சடலங்களை போடுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.