இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கின் எல்லைகளில், கடல் மட்டத்திலிருந்து 4290 மீ உயரத்தில் அமைந்திருக்கும் சர்ச்சு என்ற சுற்றுலாத்தலம் சர் பும் சுன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதன் தெற்கில் பரலச்சா லா-வும் மற்றும் வடக்கில் லாஹுலுங் வா-வும் அமைந்துள்ளன. மணாலியில் இருந்து லே- செல்லும் சுற்றுலாப் பயணிகள் இரவு தங்கிச் செல்லக் கூடிய ஓய்விடமாக சர்ச்சு இருக்கிறது; இவ்விரண்டு இடங்களும் சுமார் 475 கிமீ இடைவெளிகளில் அமைந்துள்ளன.
குளிர்காங்களில் பனி மூடியிருக்கும் இந்த நெடுஞ்சாலைகளில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க முடியாது. பனி உருகி ஓடும் காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதங்களில் இந்த பாதை போக்குவரத்திற்காக திறந்து விடப்படும்.
லே-மணாலி நெடுஞ்சாலையிலுள்ள இவ்விடத்தை, இந்நாட்களில் சுற்றுலாப் பயணிகள் ஓய்விடமாகவும், இடைநிறுத்தமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இடத்திற்கு அருகிலிருக்கும் சாரப் சு ஆற்றுக்கு அருகிலேயே இந்திய இராணுவத் தளம் ஒன்றும் உள்ளது.
ஜுன் முதல் அக்டோபர் மாதங்களில் இப்பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடாரங்களில் தங்கும் வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். இந்த கூடாரங்களில் சுவையான உணவுகளும் கிடைக்கும். லடாக்கில் உள்ள ஸன்ஸ்கார் பகுதிகளில் மலையேற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு அருமையான தளமாக சர்ச்சு விளங்குகிறது.
சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு கோடை காலத்தில் வருவது நல்லது. கோடைக்காலத்தில் சராசரி வெப்பநிலை 25°C ஆக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக உள்ளது.
சர்ச்சுவில் ஜுன் மாதத்தில் தொடங்கும் சுற்றுலா சீசன் அக்டோபர் மாதம் வரை நீடித்திருக்கும். இந்த நெடுங்சாலை வழியும், ஓய்விடங்களும் குளிர்காலம் தொடங்கும் அக்டோபர் மாதத்தின் இறுதியில் பனிப்பொழிவின் காரணமாக மூடப்பட்டு விடும். இந்நாட்களில் இவ்விடத்தின் வெப்பநிலை -35°C வரையிலும் குறைந்து விடும்.
சர்ச்சுவிற்கு விமானம் மூலம் செல்வதற்கு 255 கிமீ தொலைவில் உள்ள லே விமான நிலையத்தை பயன்படுத்தலாம். லே விமான நிலையம் புது டெல்லி, மும்பை, சண்டிகார், திருவனந்தபுரம், கோவா ஆகிய பிற இந்திய நகரங்களுக்கு விமான வசதிகள் உள்ளன.
இந்த விமான தளத்திற்கு வெளியிலேயே, சர்ச்சுவை அடைவதற்கான தனி மற்றும் ஷேர் டாக்ஸிகளை சுற்றுலாப் பயணிகள் எளிதில் அமர்த்திக் கொள்ள முடியும். மேலும், இந்த சுற்றுலா தலத்தை சுற்றுலாப் பயணிகள் 550 கிமீ தூரத்திலுள்ள ஜம்மு இரயில் நிலையத்திலிருந்தும் அடையலாம்.
சாலைப் போக்குவரத்தின் மூலமாக வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளைப் பயன்படுத்தியும், மணாலியிலிருந்து டாக்ஸிகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டும் செல்லலாம்.