சரிஸ்கா தேசிய இயற்கைப்பூங்காவில் ஜங்கிள் சஃபாரி செல்லும் அனுபவம் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் சாகச அனுபவம் என்றே சொல்லலாம். இங்குள்ள காட்டு விலங்குகளை நேரில் தரிசிப்பதும் வகைவகையான தாவரங்கள் மற்றும் மரங்களின் அழகை பருகுவதும் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய ஒன்று.
ஜங்கிள் சஃபாரி என்பது நடத்தல், மலையேறுதல் மற்றும் ஜீப் சவாரி என்ற மூன்றையும் உள்ளடக்கியுள்ளது. புலிகளின் சரணாலயம் என்று அழைக்கப்பட்டாலும் இங்கு சிறுத்தைகள், சாம்பார் மான்கள், சிறுமான்கள், நில்கை மான்கள், நான்கு கொம்பு கலைமான்கள் , காட்டுப்பன்றிகள், ரீசஸ் குரங்குகள், லாங்குர் குரங்குகள், முயல் , புனுகுப்பூனை, இந்தியக்காட்டெருமை, முள்ளம்பன்றி, கழுதைப்புலிகள் மற்றும் காட்டுப்பூனைகள் ஆகியவை வசிக்கின்றன. காட்டுக்கோழி, கௌதாரி, மணல் வாத்து, தங்கக்குருவி மற்றும் கொண்டைப்பருந்து போன்ற பறவையினங்களையும் இங்கு பார்க்கலாம்.