அரண்கள் போல் உயர்ந்து நிற்கும் இரண்டு மலைகள், கோயில்கள், இயற்கை எழில் ஆகியவை சேர்ந்து காட்சியளிக்கும் இந்த சவன்துர்க்கா நகரம் பெங்களூரிலிருந்து 33 கி.மீ தூரத்தில் உள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தை அளிக்கக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது.
மலைகளும் கோட்டைகளும்
சவன்துர்க்கா நகரம் கரிகுட்டா மற்றும் பிலிகுட்டா எனும் இரண்டு மலைகளுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. கருப்பு மலை மற்றும் வெள்ளை மலை என்பது இந்த பெயர்களின் பொருளாகும். இந்த இரண்டு மலைகளும் தக்காண பீடபூமியின் மீது 1226 மீட்டர் உயரத்தில அமைந்துள்ளன.
கிரானைட் மற்றும் லாடரைட் பாறைகளால் உருவாகியுள்ள இந்த மலைகள் ஏறுவதற்கு கடினமான மலைகளாகும். பாறைப்பிளவுகளும் மடிப்புகளும் சிகரத்தை நோக்கிய மலையேற்றத்துக்கு பெரும் சவாலாய் காணப்பட்டாலும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது உற்சாகமூட்டும் சாகசமாய் இருக்கக்கூடும். மலையுச்சியில் சிதிலமடைந்த கோட்டை ஒன்று அமைந்துள்ளது.
மலையேற்றத்திலோ அல்லது பாறையேற்றத்திலோ ஆர்வம் இல்லாத பயணிகள் இங்குள்ள வீரபத்ரேஷ்வரர் ஸ்வாமி கோயில் மற்றும் நரசிம்மஸ்வாமி கோயில் போன்றவற்றை சுற்றிப்பார்க்கலாம். இவ்விரண்டு கோயில்களும் மலையடிவாரத்திலேயே அமைந்துள்ளன.
கோயிலை சுற்றியிள்ள இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் இயற்கை நடைப்பயணமும் மேற்கொள்ளலாம். அபூர்வமான மரவகைகள் மற்றும் மஞ்சள் கழுத்து புல்புல் பறவைகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். வரலாற்று ஆர்வலர்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய சில கற்கால முதுமக்கள் தாழிகள் இங்கு காணப்படுகின்றன.
சவன்துர்கா அருகிலுள்ள ஊரான மகடி வரை பெங்களூரிலிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயண நேரம் இரண்டு மணி நேரமாக உள்ளது. மகடியிலிருந்து உள்ளூர் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் உங்களை சவன்துர்காவிற்கு அழைத்துச்செல்ல கிடைக்கின்றன.