'கோடை காலப் புகலிடம்' மற்றும் 'மலைகளின் ராணி' என்று அறியப்படும் சிம்லா இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தற்போதைய சிம்லா மாவட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. காளி தேவியின் மற்றொரு பெயரான 'சியாமளா' என்ற பெயரில் இருந்து சிம்லா என்ற பெயர் உருவானது.
ஜக்கு, ப்ராஸ்பெக்ட், அப்சர்வேட்டரி, எலிசியம் மற்றும் சம்மர் ஆகியன முக்கியமான மலைத்தொடர்கள். இந்த இடம் பிரிட்டிஷ் இந்தியாவால் 1864 ஆம் ஆண்டு கோடைக்கால தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப்பின் பஞ்சாபின் தலைநகராக விளங்கியது. பின்னர் சிம்லா இமாச்சல பிரதேசத்தின் தலைநகரானது.
காட்சிபூர்வமான இந்த மலைத்தொடர் பல சுற்றுலாத்தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. லக்கார் பஜார் மற்றும் ஸ்காண்டல் பாயிண்டை இணைக்கும் மலைத்தொடர்களின் திறந்தவெளி சிகரமான ரிட்ஜிலிரிந்து காணக்கிடைக்கும் காட்சியானது பார்வையாளர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும்.
இந்துக்கடவுளான அனுமனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜக்கு கோவில் கடல் மட்டத்திலிருந்து 8048 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கர்னல் ஜே.டி.பொய்லியு (Colonel J. T. Boileau) அவர்களால் வடிவமைக்கப்பட்ட அழகான கிறித்தவ தேவாலயம் நிறமேற்றப்பட்ட கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது மேலும் ரிட்ஜிலிருந்து காண்பதற்கு ஏதுவாக உள்ளது.
நியிங்காமா பாரம்பரியத்தைச்சேர்ந்த டோர்ஜே ட்ரக் மடாலயம் (Dorje Drak Monastery) திபெத்திய புத்த கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. மறுபுறம், காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட காளி பாரி கோவில் பல பக்தர்களால் வருடம் முழுவதும் தரிசிக்கப்படுகிறது.
இந்துப்பண்டிகைகளான தீபாவளி, நவராத்திரி மற்றும் துர்கா பூஜை இந்தக்கோவிலில் மிகவும் ஆடம்பரமாகவும் மகிழ்ச்சி பொங்கவும் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் கடல் மட்டத்திலிருந்து 1975 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சங்கட் மோட்சன் கோவிலையும் தரிசிக்க முடியும்.
இந்தக்கோவில் 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, மேலும் இது இந்துக்கடவுளான அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக்கோவிலில் உள்ள பல்வேறு பிரகாரங்களில் பல்வேறு இந்துக்கடவுள்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் பாணியை வெளிப்படுத்தும் பல்வேறு காலனித்துவ பாரம்பரிய கட்டிடங்கள் சிம்லாவில் பிரசித்தம். ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம் வசித்த இருப்பிடங்களில் ஒன்று ரோத்னி கேஸில் (Rothney Castle).
இந்தியாவின் சுதந்திரத்தைப்பற்றி வேவல் பிரபுவிடம் (Lord Wavell) விவாதிக்க 1945 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் மற்றும் மௌலானா ஆசாத் ஆகியோர் தங்கியிருந்த இடமாக விளங்கும் மானார்வில்லி மேன்சனையும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியும்.
1910 ல் கட்டப்பட்ட டவுன் ஹால் மற்றொரு கவர்ச்சிகரமான பாரம்பரியமிக்க கட்டிடம். தற்போது, இந்த கட்டிடம் சிம்லா நகராட்சி அலுவலகமாக இயங்கி வருகிறது. ராஷ்ட்ரபதி நிவாஸ் எனவும் அழைக்கப்படும் அரசுப்பிரதிநிதி மாளிகை (The Viceregal Lodge) 1988 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
ஆறு மாடி கட்டிடமான இதைச்சுற்றி பராமரிக்கப்பட்ட புல்வெளிகள் மற்றும் தோட்டங்கள் உள்ளன. இந்திய உயர்கல்வி நிலையம் ( Indian Institute of Advanced Study) தற்போது இந்த கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மறுமலர்ச்சி மிக்க கட்டிடக்கலை பாணியானது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக சிம்லாவில் அமைந்துள்ளது.
கோதிக் விக்டோரியன் கட்டடக்கலை பாணிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கெயிட்டி ஹெரிடேஜ் கல்சுரல் காம்ப்ளெக்ஸ் (Gaiety Heritage Cultural Complex) ஹென்றி இர்வினால் வடிவமைக்கப்பட்டது.
இந்த கட்டிடம் சுற்றுலா பயணிகளுக்கு, ஒரு பாரம்பரியமும் பழைமையும் வாய்ந்த மற்றும் நவீன கலைப்படைப்புக்களின் தொகுப்பைப்பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த கட்டிடம் மாநாட்டுக்கூடமாகவும் பழைய சினிமா திரையரங்காகவும் விளங்குகிறது.
ஜெனரல் சர் வில்லியம் ரோஸ் மேன்ஸ்பீல்டு அவர்களின் வசிப்பிடமாக உட்வில்லி (Woodville) இருந்தது. அவர் குடியேற்ற இந்தியாவின் படைத்தலைவராக (commander-in-chief) பொறுப்பு வகித்தவர்.
இந்தக்கட்டிடம் 1977 ஆம் ஆண்டில் ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டது. கார்டான் கேஸிலும் (Gorton Castle), ரயில்வே வாரிய கட்டிடமும் சிம்லாவின் காலனித்துவ கட்டிடக்கலையின் அற்புதத்தை எடுத்துரைக்கின்றன.
இமாலய பறவைகளின் சரணாலயம் இமாச்சலப்பிரதேசத்தின் மாநில பறவையாக அங்கீகரிக்கப்பட்ட மோனல் உட்பட பலவகையான பறவை இனங்களைப்பார்த்து மகிழும் வாய்ப்பை வழங்குகிறது.
சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் கிளென், ரிட்ஜிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது கவர்ச்சி மிகுந்த நீரோடைகளையும் பசுமையையும் கொண்டுள்ள இடமாகும்.
சுற்றுலா பயணிகள் அண்ணன்டேலுக்கும் (Annandale) உல்லாச பயணம் மேற்கொள்ள முடியும். பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ஓட்டப்பந்தயம், போலோ மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் இந்த திறந்த வெளியில் நடத்தப்பட்டது.
வரலாற்றுச்சிறப்பு மிக்க பொம்மை ரயில் (Toy Train) கர்சன் பிரபுவினால் 1903 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த 96 கிலோ மீட்டர் நீளமுள்ள பயணம் அழகான பள்ளத்தாக்குகளையும் மலைகளையும் கடந்து செல்லும் வாய்ப்பை வழங்குகிறது.
சோலன் ப்ரேவரி, தர்லாகாட், ஸ்காண்டல் பாயிண்ட், காம்னா தேவி கோவில், ஜக்கு ஹில் மற்றும் குர்க்கா கேட் ஆகியன பிரபல சுற்றுலா ஈர்ப்புத்தலங்களாகும். பஹாரி குறுஞ்சித்திரங்கள், முகலாய, ராஜஸ்தானிய மற்றும் சமகால ஒவியங்கள், ஹிமாச்சல அரசு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கலைநயம் மிக்க வெண்கல வேலைப்பாடுகள், புகைப்படங்கள், சேகரிக்கப்பட்ட தபால் தலைகள், மானுடவியல்சார் பொருட்களை இங்கு காணலாம். பார்வையாளர்களுக்கு பொருட்கள் வாங்க சிம்லா பிரத்தியேக வணிக வாய்ப்பை வழங்குகிறது.
தி மால், லோயர் மால் மற்றும் லக்கார் பஜார் போன்ற வணிக வளாகங்கள் தனிப்பட்ட மர கைவினைப்பொருட்கள் மற்றும் நினைவுப்பொருட்களுக்கு பிரசித்தி பெற்றது.
புகழ்பெற்ற பனிச்சறுக்குக்களமாக சிம்லா விளங்குகிறது. குளிர்காலத்தில் இந்த இடம் முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும் மேலும் இது பனிச்சறுக்கு விளையாட்டிற்கு உகந்த நேரமாக உள்ளது (டிசம்பர்-பிப்ரவரி).
மலையேற்றமும் இங்கு பிரபலமாக உள்ளது. ஜுங்கா, செயில், சுர்தார், ஷாலி பீக், ஹட்டு பீக் மற்றும் குல்லு போன்ற இடங்கள் சிம்லாவுடன் பல்வேறு வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் இரு சக்கர வாகனத்தின் மூலம் (mountain biking) சிம்லாவிலிருந்து நல்தேரா மற்றும் சலோக்ராவை சுற்றிப்பார்க்கலாம். பியாஸ், ராவி, செனாப் மற்றும் ஜீலம் போன்ற நதிகள் பார்வையாளர்களுக்கு படகு செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.
சிம்லா, ஆகாய,சாலை மற்றும் ரயில் போன்ற முக்கிய போக்குவரத்து வழிகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சிம்லாவின் மிக நெருக்கமான விமான தளமாக ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் (Jubbarhatti Airport) விளங்குகிறது.
இந்த விமான தளத்திற்கு இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து அடிக்கடி விமானங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகள் கால்கா ரயில் நிலையத்தின் மூலமும் இலக்கை அடையலாம்.
இது தவிர சிம்லாவை அடைய முக்கிய அண்டை நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. பனிச்சருக்குதல் (skiing and ice-skating) போன்ற விளையாட்டுக்களை விளையாட உகந்த காலமாக குளிர்காலம் கருதப்படுகிறது அதேசமயம் மலையேறுதல் மற்றும் சுற்றிப்பார்க்க உகந்த காலமாக கோடைகாலம் விளங்குகிறது.