சிவகங்கே பெங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது . அங்கு காணப்படும் பெரிய பெரிய பாறாங்கற்கள் மலை ஏறும் சாகசத் தருணத்தை பயணிகளிடையே நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.
சிவகங்கே என்பது அடிப்படையில் ஒரு சிறு குன்று. அதன் உச்சியில் காணப்படும் சிவன் கோயிலின் காரணமாகவே இதற்கு சிவகங்கே என்று பெயர் வந்தது.
சிவகங்கேயில் உள்ள அருவியும், ஓடையும் அதன் தோற்றத்துக்கு மேலும் அழகு சேர்க்க கூடியவை. சிவகங்கேயின் வற்றாத ஓடை நீர், புனித நதியான கங்காவிலிருந்து பெறப்பட்டது என்று அப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர். அதன் காரணமாகவே இதற்கு சிவகங்கே என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தக்ஷ்ன காசி என்ற புனை பெயராலும் சிவகங்கே அழைக்கப்படுகிறது.
தொன்மையான கங்காதேஸ்வரா கோயில் சிவகங்கேயின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் இருந்து பெங்களூரில் உள்ள கவி கங்காதேஸ்வரா கோயிலுக்கு இரகசிய சுரங்கப்பாதை ஒன்று செல்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை அது போல இரகசிய வழி ஏதும் கண்டறியப்படவில்லை.
சிவகங்கேவுக்கு அருகாமை நகரமாக 8 கிலோமீட்டர் தொலைவில் தபஸ் பெட்டு நகரமே இருக்கிறது. பெங்களூரிலிருந்து வரும் பயணிகள் முதலில் தும்கூர் வந்து, பின்னர் அங்கிருந்து தபஸ் பெட்டு நகரை வேறு பேருந்தில் அடைய வேண்டும். அதற்கு பிறகு தபஸ் பெட்டிலிருந்து சிவகங்கே செல்ல நிறைய தனியார் பேருந்துகள் இருக்கின்றன.