திருக்காழி ஸ்ரீ ராம விண்ணகரம் என்னும் பெருமாள் கோவில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழியில் உள்ள பெருமாள் கோவிலாகும். 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்யதேசங்களில் இக்கோவிலும் ஒன்று.
சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ளது இக்கோவில். மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் இக்கோவிலில் உருவகிக்கப்பட்டுள்ளது.
வாமன மூர்த்தியின் விக்கிரகம் முதன்மை கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. சாளக்கிரமத்தினால் ஆன மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு மரத்தினால் ஆன குடையை இடது கரத்தில் பிடித்துக்கொண்டு, வலதுகரத்தை நீட்டி தானம் கேட்பது போல வான மூர்த்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அருகில் திருமங்கை ஆழ்வார் காலில் சிலம்பும் கையில் வேலும் கொண்டு காட்சியளிக்கிறார். வீடுகள் கட்ட வாஸ்து பூஜை செய்வோர் தமது நிலத்திலிருன்து எடுத்த மண்ணை இக்கோவிலுள்ள திருமங்கை ஆழ்வார்க்கு சமர்ப்பணம் செய்கின்றனர்.
அப்படிச் செய்தால், நல்லதிர்ஷ்டமும் வெற்றியும் கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கை. பிரகாரத்தில் பகவான் ஸ்ரீராமருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.